லாஸ் வேகாஸ் : 50 குத்துச்சண்டை போட்டிகளில் வென்று உலக சாதனை படைத்துள்ளார் உலகின் முதல் நிலை வீரர் மேவெதர். இதனையடுத்து அவருக்குப் பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.
ரூ.4000 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மேவெதர் - மெக்கிரிகோர் மோதிய குத்துச்சண்டைபோட்டி லாஸ் வேகாஸில் நடைபெற்றது. அதில் மேவெதர் தனக்கு ஈடாக யாரும் இல்லை என்பதை , மெக்கிரிகோரை வென்று நிரூபித்தார்.
தொழில்முறை குத்துச்சண்டையில் தோல்வியே சந்திக்காதவர் 40 வயதான மேவெதர். 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், மீண்டும் குத்துச்சண்டை களத்திற்கு திரும்பி இந்த வெற்றியை நிகழ்த்தி இருக்கிறார்.
பங்கேற்ற 50 போட்டிகளிலும் வாகை சூடிய மேவெதர் அதில் 26 பேரை நாக்-அவுட் செய்திருக்கிறார். யு.எப்.சி. லைட்வெயிட் சாம்பியனான 29 வயதான மெக்கிரிகோர் இதுவரை 25 போட்டியில் விளையாடி 21-ல் வெற்றி பெற்றுள்ளார். போட்டிக்கு முன்னதாக மேவெதர் கூறும் போது, 'குத்துச்சண்டை வரலாற்றில் மிகப்பெரிய போட்டி இதுவாகும். முக்கியமான இந்த மோதலை கண்டுகளிக்க வேண்டும் என்றால் அதிக தொகையை கொடுக்கத்தானே வேண்டும்' என்று கூறியிருந்தார். அதன்படி அவரின் ரசிகர்கள் கோடிகளை கொட்டி போட்டியை கண்டு ரசித்துள்ளனர்.