இந்திய குழுவினர்
பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிகுமார் வெள்ளிப்பதக்கமும், குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஆக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் என இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். தடகளப்பிரிவில் ஒரு பதக்கம் கூட பெற முடியவில்லை என்ற இந்தியாவின் 100 வருட ஏக்கத்தை நீரஜ் சோப்ரா போக்கினார்.
வீரர்களுக்கு விருந்து
இதனிடையே டோக்கியோ ஒலிம்பிக்கில் அசத்திய இந்திய குழுவை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சந்தித்தார். டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது அவர் விருந்து வைத்தார். மேலும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் அவர் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். பல்வேறு வீரர், வீராங்கனைகளுக்கு தனிப்பட்ட முறையில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
பிரதமருக்கு பரிசு
இந்நிலையில் தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பவானி தேவி, எனது தாயாருடன் இணைந்து பிரதமர் மோடியை சந்தித்தேன். அவருக்கு நான் பயன்படுத்திய வாள் ஒன்றை கையெழுத்திட்டு பரிசாக கொடுத்தேன். அதனை கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார்.
புகழாரம்
அப்போது பேசிய பிரதமர் மோடி, ஒலிம்பிக்கில் ஃபென்சிங் போன்ற புதிய விளையாட்டில் இந்தியாவுக்காக முதல் முறையாக தேர்வாவது என்பது சாதரண காரியம் அல்ல. இந்தியர்களுக்கு புதுவித போட்டி ஒன்றை அறிமுகம் செய்து பெருமைப்படுத்தி உள்ளீர்கள். நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் மீது ஆர்வத்தை தூண்டியுள்ளீர்கள். நீங்கள் 'ஜான்சி ராணி' போன்றவர் என புகழ்ந்தார் என்று பவானி தேவிக் குறிப்பிட்டுள்ளார்.
பதக்க நம்பிக்கை
சென்னையைச் சேர்ந்த பவானிதேவி ஒலிம்பிக் வாள் சண்டையில் களமிறங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் ஆவார். இவர் முதல் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றார். 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் துனிசிய வீராங்கனை நாடியா பென் அஸிஸியை அவர் வீழ்த்தினார். ஆனால் இரண்டாவது போட்டியில், வாள்வீச்சு போட்டியில் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டிடம் 7/15 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். எனினும் அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.