வீரர்கள் ஏமாற்றம்
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு தொடர்கள் கேள்விக்குறியாகியுள்ளன. இந்நிலையில் டோக்கியோவில் அடுத்த வாரத்தில் துவங்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2020ம் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒலிம்பிக் போட்டிகளில் தகுதி சுற்றுகளில் தேர்வான மற்றும் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த வீரர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வீடுகளில் வீரர்கள் முடக்கம்
நாடுமுழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 4 மாதங்களாக விளையாட்டு வீரர்களின் பயிற்சிகள் மற்றும் அதற்கான முகாம்கள் தடைபட்டு வருகிறது. இதையடுத்து, ஒலிம்பிக் போட்டிகளுக்கான வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர்.
பயிற்சி முகாம்களுக்கு முன்னுரிமை
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை கைவிட மாட்டோம் என்றும் அவர்களுக்கான பயிற்சி முகாம்களுக்கே முன்னுரிமை தரப்படும் என்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
வீரர்களிடம் ஆலோசனை
மாநிலங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயிற்சி முகாம்கள் தொடங்கவுள்ளதாகவும் பாட்டியாலாவில் பாக்சிங் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்னதாக குவாரன்டைனில் உள்ளதாகவும் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இதே போல துப்பாக்கி சுடுதலுக்கான பயிற்சியும் துவங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களிடம் தான் தனிப்பட்ட முறையில் பேசி வருவதாகவும் அவர் கூறினார்.