குஜராத்: தேசிய விளையாட்டுப்போட்டியில் மீராபாய் சானு மீண்டும் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
36-வது தேசியவிளையாட்டுப் போட்டிகள் நேற்று பிரதமர் முன்னிலையில் குஜராத்தில் கோலாகலமாக தொடங்கியது.
சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த தேசிய விளையாட்டு போட்டி வரும் அக்டோபர் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டி நடைபெறுவதால் பங்குபெறுவோர்களின் எண்ணிக்கையும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. அதாவது 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் இருந்தும் சுமார் 7,0000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். மொத்தம் 36 விளையாட்டுகளில் போட்டி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மீராபாய் சானு களமிறங்கினார். சிறப்பாக செயல்பட்ட அவர் இறுதி சுற்றில் சஞ்சிதா சானுவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஒடிசாவை சேர்ந்த ஸ்னேகா சோரன் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இதே போல மகளிருக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இலவேனில் வாலரிவன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார். இன்று மாலை 4 மணிக்கு மேலாக டென்னிஸ், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற முக்கிய போட்டிகள் நடைபெறவுள்ளது.