டெல்லி : 2019க்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வென்ற தீபா மாலிக் புதிய சாதனை படைத்துள்ளார்.
2019க்கான விளையாட்டு விருதுகள் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்டது. இந்த விழாவில் விருது வென்ற வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு ஜனாதிபதி கையால் விருது பெற்று மகிழ்ந்தனர்.
இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பாரா (மாற்றுத் திறனாளி) தடகள வீராங்கனையான தீபா மாலிக் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவிற்கு அறிவிக்கப்பட்டது.
பஜ்ரங் புனியா கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இருப்பதால், அவரால் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
தீபா மாலிக் மட்டுமே இந்த ஆண்டு ஜனாதிபதி கையால் கேல் ரத்னா விருது பெற்றார். இந்த விருதை பெறும் முதல் பெண் மாற்றுத் திறனாளி வீராங்கனை மற்றும் அதிக வயது கொண்டவர் தீபா மாலிக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2016 ரியோ பாரா ஒலிம்பிக் தொடரில் ஷாட் புட் 53 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி வென்றார் தீபா மாலிக். அது தான் அவரை கேல் ரத்னா விருது வெல்ல வைத்துள்ளது. மேலும், அவர் இனி விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில், அவரை அரசு கௌரவித்துள்ளது.
தேசிய விளையாட்டு தினம்..! உலக அரங்கில் பட்டொளி வீசி பறந்த இந்தியர்கள்..! ஒரு மீள் பார்வை
இந்த விருது பற்றி பேசுகையில், "இந்த விருது மாற்றுத் திறனாளி பெண் தடகள வீராங்கனைகளுக்கு பெரிய ஊக்கமாக இருக்கும். சுதந்திர இந்தியாவில் பாராலிம்பிக் பிரிவில் பதக்கம் வெல்ல 70 ஆண்டுகள் ஆகி இருக்கிறது" என்று கூறினார் தீபா மாலிக்.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது. அவர் வெஸ்ட் இண்டீஸ்-இல் இருப்பதால் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.