முதல் தங்கம்
சமீபத்தில் நிறைவடைந்த ஒலிம்பிக் தொடரின் இறுதிப் போட்டியில், முதல் சுற்றில் 87. 03 மீட்டர் தூரம் ஈட்டியை வீசிய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 2வது சுற்றில் 87.58 மீ தூரம் வீசி அசர வைத்தார். இவரது 87.58 மீட்டர் என்ற தூரத்தை எந்த ஒரு வீரராலும் தகர்க்க முடியவில்லை. இதனால் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கமாகும். இதற்கு முன்னர் பி.வி.சிந்து, மீராபாய் சானு, ரவிக்குமார் தஹியா உள்ளிட்டோர் 6 பதக்கங்களை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தனர். இதுமட்டுமல்லாமல் ஒலிம்பிக்கில் தனி நபர் ஆட்டத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் 2வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.
நிறைவேற்றிய நீரஜ்
இதற்கு முன்னர் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக் தொடரில் இந்தியா கடந்த 1920ம் ஆண்டு முதல் பங்கேற்று வருகிறது. பல்வேறு போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை வென்று வந்தாலும், தடகளப்போட்டியில் மட்டும் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை. கடந்த 1960ம் ஆண்டு மில்கா சிங், 1984ம் ஆண்டு பி.டி.உஷா ஆகியோரால் கூட பதக்கம் வென்று கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் பதக்கத்திற்காக 100 ஆண்டுகளாக காத்திருந்த இந்தியாவின் ஏக்கத்தை நீரஜ் சோப்ரா இந்த ஒலிம்பிக்கில் போக்கினார்.
நீரஜ் சோப்ரா எதிர்ப்பு
இந்நிலையில், ஒலிம்பிக் தொடரில் முதல் சுற்றில், போட்டி நேரத்தில் நீரஜ் சோப்ரா அவரது ஈட்டியை காணாமல் தேடியதாகவும், பின்னர் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் அதனை வைத்திருந்ததால் அவரிடம் சென்று, "இது எனது ஈட்டி; என்னிடம் கொடுங்கள்" என்று கேட்டு வாங்கி வந்து எறிந்ததாகவும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நீரஜ் தெரிவித்திருந்தார். இதையடுத்து, ஒலிம்பிக் போட்டியின் போது, மற்றவர்களது ஈட்டியை எப்படி அவர் வைத்திருக்க முடியும் என்று பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பலரும் பதிவிட்டனர். இந்த நிலையில் ,இதுகுறித்து நீரஜ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்களது பிரச்சாரத்துக்காக என்னையும், எனது கருத்துகளை பயன்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். விளையாட்டு எங்களுக்கு ஒற்றுமையாக இருக்க கற்றுக் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் நான் சொன்ன கருத்துக்கு சிலரிடமிருந்து வரும் எதிர் கருத்துகள் என்னை அதிகம் ஏமாற்றம் அடைய செய்துள்ளது. நீங்கள் ஒரு கருத்தை தெரிவிக்கும்போது அந்த விளையாட்டின் நெறிமுறையை தெரிந்து வைத்திருப்பது அவசியம்" என்று தெரிவித்துள்ளார். சுருக்கமாக உங்க போதைக்கு நான் ஊறுகாய் கிடையாது என்று நீரஜ் சோப்ரா குறிப்பிட்டிருக்கிறார்.
அடுத்த இலக்கு முக்கியம்
முன்னதாக ஒலிம்பிக் பதக்கம் குறித்து பேட்டியளித்திருந்த நீரஜ் சோப்ரா, "பதக்கம் வென்ற பிறகு சில காலத்துக்கு நாம் அதை கொண்டாடுவோம், அதைப் பற்றி பேசுவோம். பிறகு, அனைவரும் அதை மறந்துவிடுவார்கள். ஆனால், நாம் அப்படி இருக்கக் கூடாது. ஒவ்வொரு போட்டிகளில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானது. இந்த மாத இறுதியில் ஒரு டயமண்ட் லீக் போட்டி உள்ளது. நான் அதில் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து திரும்பிய பிறகு, தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதால் எனது பயிற்சி முற்றிலும் தடைபட்டது. அதனால்தான் இப்போது என் உடற்தகுதி குறைந்திருப்பதாக உணர்கிறேன். என்னால் சரியாக போட்டியிட முடியாது. எனவே, நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். இந்த விஷயங்கள் இந்திய விளையாட்டில் மாற வேண்டும். மற்ற அனைத்து ஒலிம்பிக் சாம்பியன்களும் டயமண்ட் லீக்கில் பங்கேற்கிறார்கள். அவர்களின் போட்டி தொடர்கிறது. ஒரு தங்கப் பதக்கத்தால் நாம் திருப்தி அடைய முடியாது. சர்வதேச அளவில் நாம் சிந்திக்க வேண்டும். டயமண்ட் லீக் போன்ற உலகளாவிய நிகழ்வுகளில் நாம் தொடர்ந்து பங்கேற்க வேண்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.