அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு
கொரோனா வைரஸ் காரணமாக டோக்கியோவில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் ஆகியோர் தொலைபேசி மூலம் ஆலோசனை மேற்கொண்டு, போட்டியை அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைத்து அறிவித்தனர்.
தயக்கத்திற்கான காரணம்
ஏதோ ஒரு கால்பந்து போட்டியை ஒத்திவைப்பதை போல ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க முடியாது என்று முன்னதாக ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சு அனைத்து தரப்பினருக்கும் கோபத்தை வரவழைத்திருக்கலாம். மக்களின் உயிருக்கு முன்பு இவர் இப்படி பேசுகிறாரே என்ற கேள்வியும் எழுந்திருக்கலாம். ஆனால் அவர் சொன்னதன் அர்த்தம் தற்போது வெளியாகியுள்ளது.
45 ஆயிரம் கோடி நஷ்டம்
ஒலிம்பிக் போட்டிகள் முதல்முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஏற்கனவே 90,000,00,00,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த ஒத்திவைப்பால், அதில் பாதி அதாவது 45,000,00,00,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஒலிம்பிக் கமிட்டி சார்பில் கூறப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர் தகவல்
ஒலிம்பிக் தள்ளிவைப்பால் ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள கான்சாய் பல்கலைகழகத்தின் பொருளாதார நிபுணர் காட்சுஹிரோ மியாமோட்டோ இந்த தகவலை தெரிவித்துள்ளார். இடம், தன்னார்வலர்கள், விளம்பரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் இதுவரை செலவிடப்பட்டுள்ளதையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
இந்த ஒரு ஆண்டிற்கு மட்டும் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், தற்போது அதற்கு கூடுதல் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் இதேபோல, பல்வேறு விஷயங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பல்வேறு இடங்களும் அடுத்த ஆண்டு கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் புதிய இடங்களுக்கு கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும்.
ஹோட்டல்களும் புதிதாக புக் செய்யப்பட வேண்டும்
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கும் 10,000 வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகள் ஏற்கனவே புக் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக இடங்களை தேர்வு செய்து புக் செய்யப்பட வேண்டும். இதேபோல 4.5 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நிர்வாகிகள் இன்னும் எந்த அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிய, பெரிய நிறுவனங்கள் பாதிப்பு
இவ்வாறு சிறிய நிறுவனங்கள், ஹோட்டல்கள் முதல் பெரிய நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் வரை அனைத்தும் இந்த ஒலிம்பிக் போட்டிகளால் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளன. மேலும் ரசிகர்களும் மிகவும் ஆர்வத்துடன் ஒலிம்பிக் போட்டிகளை காண காத்திருந்தனர். அவர்களின் உற்சாகம் தற்போது ஒரு வருடத்திற்கு காணாமல் போயுள்ளது. அனைத்திற்கும் காரணம் இந்த கொரோனா...