டெல்லி: பிரதமர் மோடிக்கு பரிசளிக்கப்பட்ட விளையாட்டு சாதனங்கள் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் கோடிக்கணக்கான பணம் குவிந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அவரின் பிறந்தநாளையொட்டி புதிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுகள் ஏலத்தில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த ஓராண்டில் அவர் பெற்ற நினைவு பரிசுகள், பட்டு அங்கவஸ்திரங்கள், கலை ஓவியங்கள், கோவில் சிற்ப மாதிரகள், அயோத்தி ராமர் கோயில் மாதிரி உள்ளிட்டவை ஏலம் விடப்பட்டது. இதே போல சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் பிரதமர் மோடிக்கு அவர்கள் போட்டியில் உபயோகித்த விளையாட்டு உபகரணங்களை பரிசாக வழங்கினர். அந்த பொருட்களும் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய நீரஜ் சோப்ராவின் ஈட்டி தான் அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளது. ஆரம்பத்தொகையாக 1 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட அந்த ஈட்டி ரூ.10 கோடிக்கு ஏலம் போனது. இதே போல வெண்கலப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லினாவின் க்ளவுசுகள் ரூ.80 லட்சத்திற்கு ஆரம்பத் தொகையாக ஏலம் விடப்பட்டது. இறுதியில் ரூ. 10 கோடிக்கு ஏலம் போனது.
இதே போல பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற சுமித் அண்டிலின் ஈட்டி ரூ.3 கோடிக்கு ஏலம் போனது. இதற்கு அடுத்தபடியாக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பயன்படுத்திய பேட் ரூ.2 கோடியும், இந்திய வீரர்கள் பயன்படுத்திய ஹாக்கி ஸ்டிக்கும் ரூ.1 கோடிக்கும் ஏலம் போனது. இந்த மின்னணு ஏலம் மூலம் கிடைக்கும் வருவாயை கங்கை நதியை பாதுகாக்கும் மற்றும் தூய்மைப்படுத்தும் நமாமி கங்கை திட்டத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்திய பிரதமரானது முதல் ஏற்கனவே இரண்டு முறை ஏலம் விடப்பட்டது.