மும்பை: காமன் வெல்த் போட்டிகளில் இருந்து இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக புகழ்பெற்ற காமன் வெல்த் போட்டிகள் வரும் ஜூலை 29ம் தேதி முதல் இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து நாடுகளில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் இங்கிலாந்து நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
பிரபலமான இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் சார்பில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு காரணம் அவரின் தற்போதைய ஃபார்ம் தான். ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றிருந்த நீரஜ் சோப்ரா, சமீபத்தில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். 19 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவின் பதக்க கனவை நிறைவேற்றிக் கொடுத்தார்.
டி20 உலகக்கோப்பை அணியில் டி.நடராஜன்.. ஆஸ்திரேலிய களத்தில் பெரிய பலம்.. பாக்.சீனியர் கூறிய ஐடியா!
இந்நிலையில் காமன் வெல்த் போட்டிகளில் அவர் பங்குபெற போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நீரஜ் சோப்ராவின் உடற்தகுதி 100 சதவீதம் இல்லை எனவும் அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் குறைய வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மூத்த அதிகாரி ராஜீவ் மேதா, நீரஜ் சோப்ராவுக்கு சமீபத்தில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு தொடை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஒரு மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவேதான் அவர் விலகியுள்ளார் எனக் கூறியுள்ளார்.