டோக்கியோ: டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் 2020 துவக்க விழாவில் இந்தியா அணிவகுப்பு நடத்தியது. குத்துசண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தினார்கள். 21வது அணியாக ஒலிம்பிக் மைதானத்தில் இந்தியா அணிவகுப்பு நடத்தியது.
ஒலிம்பிக் 2020 தொடரின் துவக்க விழா இன்று டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது. விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் கடைசியில் ஒரு வழியாக தொடங்கிவிட்டது. உலகமே கொரோனா என்று கொடூர நோயால் முடங்கி கிடக்கும் போது மக்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளிக்கும் விதமாக இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது.
கடந்த வருடம் நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக தள்ளிப்போன நிலையில் இந்த வருடம் பெயர் மாற்றம் இன்றி ஒலிம்பிக் 2020 என்ற பெயரிலேயே நடக்கிறது. மிகுந்த பாதுகாப்புடன் லோக்கல் பேன்ஸ் இன்றி இந்த போட்டிகள் டோக்கியோவில் நடக்கிறது.
ஜப்பான் நேரப்படி அங்கு இரவு 8 மணிக்கும், இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கும் இந்த துவக்க விழா தொடங்கியது. இந்தியா சார்பாக இந்த துவக்க விழாவில் 20 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவை சேர்ந்த ஒலிம்பிக் குழு அதிகாரிகள் 6 பேர் கலந்து கொண்டனர்.
லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வாங்கிய மேரி கோம், இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகியோர் இந்திய குழுவின் தேசிய கொடியை இன்று ஏந்தி சென்றனர். டேபிள் டென்னிஸ் குழுவினர், பாக்சின் வீரர்கள், நீச்சல் வீரர்கள் இந்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.
இந்த ஒலிம்பிக் தொடருக்கு இந்தியா முதல்முறையாக அதிக அளவில் 127 வீரர்களை அனுப்பி உள்ளது. இதில் முதல் முறையாக அதிக அளவில் 56 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். 2016 ஒலிம்பிக் சில்வர் மெடல் வின்னர் பிவி சிந்து, நம்பர் 1 வில் வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, டென்னீஸ் வீராங்கனை சானியா மிர்சா போன்ற யாரும் இன்று துவக்க விழாவில் கலந்து கொள்ளவில்லை.
துப்பாக்கி சுடும் வீரர்கள், வில்வித்தை குழுவினர், மற்ற பெரும்பான்மையான வீரர்கள் யாரும் இன்று துவக்க விழாவில் கலந்து கொள்ளவில்லை. கொரோனா பரவல், தனிப்பட்ட பாதுகாப்பு காரணமாக உலக வீரர்கள் பலர் இன்று விழாவில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளனர். இன்று நடக்கும் விழாவில் பெரிய கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் இல்லை என்றாலும் சிறிய அளவிலான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்பட்டது. வானவேடிக்கைகள், அலங்காரங்கள் மூலம் மைதானம் விழா முழுக்க மிளிரியது.
இந்தியாவில் ஒலிம்பிக் ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் வாங்கி உள்ளது. இதனால் இந்தியாவில் SONY SIX, SONY TEN 1, SONY TEN 2, SONY TEN 3 AND SONY TEN 4 சேனல்களில் ஒலிம்பிக் போட்டிகளை காண முடியும். ஆன்லைனில் SonyLIVல் பார்க்க முடியும்.
இன்று துவங்கி உள்ள ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 8ம் தேதி வரை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நடக்கும் துவக்க விழாவில் இந்தியாவின் அணிவகுப்பை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், பல்வேறு முன்னாள் விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் தேசிய தயான் சந்த் மைதானத்தில் இருந்து கண்டுகளித்தனர்.