வலிமை
ஆனால் பைனல் செல்லும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் அணி அர்ஜென்டினாவிற்கு எதிராக செமி பைனலில் இந்தியா 2:1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்தியா சரியாக ஆடவில்லை என்பதை விட அர்ஜென்டினா மிகவும் வலிமையாக இருந்தது என்பதே நிதர்சனம்.
மோசம்
இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா வீடு முன் "உயர் சாதி" இளைஞர்கள் சிலர் வெடி வெடித்து கொண்டாடி உள்ளனர். ஹரித்வாரில் இருக்கும் கட்டாரியா வீடு முன் வெடி வெடித்து இந்தியாவின் தோல்வியை கொண்டாடி உள்ளனர். இந்திய அணியில் தலித் வீராங்கனைகள் அதிகம் இருப்பதால்தான் இந்தியா தோல்வி அடைந்ததாக கோஷம் எழுப்பி வெடி வெடித்தனர்.
பல்வேறு போட்டி
லீக் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு பலமுறை உதவியவர் கட்டாரியா. அப்படிப்பட்ட திறமையான வீராங்கனையை ஜாதி வன்ம தாக்குதலுக்கு உள்ளாக்கி உள்ளனர். கட்டாரியா டோக்கியோவில் இருக்கும் போது இங்கே அவரின் வீடு முன் ஜாதி வன்ம தாக்குதல்கள் அரங்கேறி உள்ளது. இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு, தற்போது இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விமர்சனம்
இந்திய அணிக்காக ஆடும் ஒரு வீராங்கனையை, அதிலும் வெற்றிகரமான ஒரு வீராங்கனையை தலித் என்ற காரணத்திற்காக விமர்சனம் செய்தது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இணையத்தில் இந்த சம்பவத்திற்கு எதிராக பலர் கடுமையாக குரல் எழுப்பி உள்ளனர். இந்த விஷயத்தை நெட்டிசன்கள் மிக கடுமையாக கண்டித்து வரும் நிலையில் வந்தனா கட்டாரியா தனது கோல் மூலம் இன்று பதிலடி கொடுத்தார்.
கோல்
அனைத்து ஜாதி ரீதியான தாக்குதல்களுக்கும் இன்று பிரிட்டனுக்கு எதிரான போட்டியில் கோல் அடித்து வந்தனா பதிலடி கொடுத்தார். ஜாதி தாக்குதல்களை காலால் உதைத்து தள்ளி.. இப்போ போய் எங்க வீட்டு முன்னாடி வெடி வெடிங்க என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இன்று ஆட்டத்தின் 23 மற்றும் 26வது நிமிடத்தில் இந்தியா வரிசையாக இரண்டு கோல்களை போட்டது. இந்தியாவின் குர்ஜித் கார் இரண்டு கோல் போட்டு அசத்தினார்.
அசத்தல் பதிலடி
இதனால் ஆட்டம் சமனில் இருந்தது. அப்போது ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் தீயாக ஓடி வந்த கட்டாரியா 3வது கோல் போட்டார். மற்ற இரண்டு கோல்கள் பெனால்டி கார்னர் மூலம் வந்தது. ஆனால் இந்த கோல் தானாக கட்டாரியா போட்டது. தனக்கு வந்த பாசை லாவகமாக திருப்பி கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் பிரிட்டனுக்கு எதிராக 3:2 என்ற கோல் கணக்கில் இந்தியா லீட் எடுத்தது. இவரின் கோல்தான் இந்தியா லீட் எடுக்க காரணம்.
இந்தியா ஹாக்கி
இந்திய ஹாக்கி வரலாற்றில் காலம் காலமாக பெண்கள் அணியிலும், ஆண்கள் அணியிலும் பல தலித், பழங்குடியின வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா இந்த அளவிற்கு ஆடுவதற்கு கூட இவர்கள்தான் காரணம். 41 வருடங்கள் கழித்து ஆண்கள் அணி செமி பைனல் செல்லவும், பெண்கள் அணி முதல் முறையாக செமி பைனல் செல்லவும் இவர்களே காரணம்.. ஏற்கனவே இந்த வீரர், வீராங்கனைகள் காரணம் போதிய ஆதரவு இன்றி, ஹாக்கி மீதான காதல் என்ற ஒரே காரணத்திற்காக இந்தியாவிற்காக ஆடி வரும் இவர்கள்.. இப்போது கூடுதலாக ஜாதி வன்மங்களையும் எதிர்கொள்ள வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது