ஆட்டம்
இன்றைய போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இந்திய பெண்கள் படை போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. முக்கியமாக கேப்டன் ராணி ராம்பால் மிக சிறப்பான வியூகத்தோடு தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடி வந்தார். முதல் பாதியில் ஒரு இடத்தில் கூட ஆஸ்திரேலியாவிற்கு கோல் அடிக்கும் அளவிற்கு வாய்ப்பு கொடுக்காமல் முடிந்த அளவு இந்திய டிபன்ஸ் காப்பாற்றியது.
முக்கியம்
அதிலும் இன்று குர்ஜித் கார் ஆடிய விதம்.. ப்பா.. டிபன்ஸ் இடத்தில் ஆடிய குர்ஜித் கொஞ்சம் கூட ஆஸ்திரேலியாவிற்கு இடம் கொடுக்காமல் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார். அதிலும் டிபன்ஸை தாண்டி சென்ற எந்த பந்தையும் கீப்பர் சவிதா புனியா கோல் போஸ்டிற்கு உள்ளே விடவில்லை. நேற்று ஆண்கள் அணியில் கோல் போஸ்டை எப்படி ஸ்ரீஜித் இரும்பு தூண் போல காத்தாரோ அதே பணியை இன்று சவிதா செய்தார்.
சவிதா
சுவர் போல வலிமையாக நின்று ஆஸ்திரேலியாவின் எந்த கோல் முயற்சியும் வெற்றிபெறாமல் சவிதா ஆட்டத்தை கட்டுப்படுத்தினர். இன்று 6 முறைக்கும் மேல் பெனால்டி கார்னர் ஷாட் வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்தது. மேலும் முதல் மூன்று கால் ஆட்டங்களிலேயே 7 முறை கோல் அடிக்கும் வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்தது. ஆனால் அது அனைத்தையும் சவிதா தனி நபராக தடுத்தார்.
ரேடார்
பார்டரில் நிற்கும் ரேடார் போல ஒரு பந்தை கூட உள்ளே விடாமல் பாதுகாத்தார். இன்று கோல் கீப்பிங் மட்டும் லேசாக சொதப்பி இருந்தாலும் ஆட்டம் காலி என்ற நிலைதான் இருந்தது. சவிதா தவிர்த்து தீப் கிரேஸ் எக்கா, உதித்தா, நேஹா கோயல், கேப்டன் ராணி, நிஷா என்று இந்திய வீராங்கனைகள் எல்லோரும் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணிக்கு 9வது நிமிடத்திலேயே கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
போஸ்ட்
ஆனால் அப்போது கோல் போஸ்டில் இந்திய கேப்டன் ராணி ராம்பால் அடிக்க கோல் வாய்ப்பு நழுவியது. ஆனால் அடுத்த 13 நிமிடத்தில் "அவன் தம்பி வந்துட்டான்டா மிலிட்டிரிக்கு" என்பது போல குர்ஜித் கார் 22வது நிமிடத்தில் கோல் அடைத்தார். இந்த கோல்தான் இந்த போட்டியில் அடிக்கப்பட்ட ஒரே கோல். குர்ஜித் நிகழ்த்திய இந்த மேஜிக்தான் ஆட்டத்தை மாற்றியது.
மேஜிக்
கடைசி கால் ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவிற்கு 4 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் அதை கோலாக மாற்ற முடியாமல் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது. இந்திய அணிக்கு லேசாக டிபன்ஸில் சில குறைபாடுகள் உள்ளது. இதை அடுத்த போட்டிக்குள் சரி செய்ய வேண்டும்.
ஆஸ்திரேலியா
இந்த தொடரில் லீக் போட்டியில் எல்லா மேட்சிலும் ஆஸ்திரேலியா கோல் அடித்தது. மொத்தமாக லீக் போட்டியில் 13 கோல் அடித்தது, சீனாவிற்கு எதிராக மட்டும் 6 கோல்களை ஆஸ்திரேலியா அடித்தது. அந்த அளவிற்கு தொடர் முழுக்க ஆஸ்திரேலியா ராஜாங்கம் நிகழ்த்தியது.
ஆனால் சாதனை
ஆனால் அப்படிப்பட்ட ஆஸ்திரேலியாவை இந்தியாவின் சவிதா மற்றும் ராணி ராம்பால் படை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் கட்டுப்படுத்தி, செமி பைனலில் வென்று இருக்கிறது. இந்திய பெண்கள் அணியின் வெற்றிக்கு பல்வேறு காரணங்களில் ஒடிசா அரசும் மிக முக்கிய காரணம் ஆகும். ஒடிசா அரசுதான் இந்திய ஹாக்கி அணிக்கு தொடர்ந்து ஸ்பான்சர் செய்து வருகிறது. இந்திய ஹாக்கி அணியின் தேவைகளை ஒடிசா அரசு முழுமையாக தீர்த்து வைத்து உள்ளது. பொருளாதார ரீதியாக ஒடிசா அரசுக்கு இது பெரிய அளவில் உதவியாக இருந்தது. சர்வதேச போட்டிகளில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் மீண்டு வர இது மிகப்பெரிய உத்வேகம் கொடுத்தது. இனி மீதம் உள்ள போட்டிகளில் இந்திய பெண்கள் அணி வெல்கிறதோ வெல்லவில்லையோ.. இந்த ஒரு ஆட்டம்.. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த ஒரு வெற்றி.. ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் எப்போதும் பேசப்படும்!