ஆதிக்கம்
இதில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி கடைசியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் 49 வருடங்களுக்கு பின் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி செமி பைனலுக்கு சென்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு ஒவ்வொரு வீரர்களும் காரணமாக திகழ்ந்தாலும், கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் மிக முக்கியமான காரணமாக இருந்தார்.
பிஆர் ஸ்ரீஜேஷ்
கடந்த லீக் ஆட்டங்களில் இருந்தே இந்தியாவை தோல்வியில் இருந்து காப்பாற்றி வரும் பணியை பிஆர் ஸ்ரீஜேஷ் மிக சிறப்பாக செய்து வருகிறார். நேற்று முக்கியமான கட்டங்களில் பிரிட்டனின் 3 கோல் முயற்சியை தடுத்தது பிஆர் ஸ்ரீஜேஷ்தான். சுவர் போல வலிமையாக நின்று கடைசி நொடி வரை பிரிட்டனின் கோல் முயற்சிகளை தடுத்து இந்தியாவை வெற்றிபெற வைத்தார்.
சிறப்பு
ஒரு கோலை தடுப்பது என்பது ஒரு கோலை போடுவதற்கு சமம் என்பார்கள். அதற்கு ஏற்றபடி பிஆர் ஸ்ரீஜேஷ் நேற்று ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார். முன்னாள் கேப்டன் இவர் என்பதால் கோல் போஸ்டில் இருந்து வீரர்களை மிக சிறப்பாக வழி நடத்தினார். இந்த தொடர் முழுக்கவே பிஆர் ஸ்ரீஜேஷ் பல பெனால்டி ஷாட்களை தடுத்து இருக்கிறார்.
தடுத்தார்
முக்கியமாக அர்ஜென்டினாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்தியாவின் தடுப்பாட்ட வீரர்கள் மிகவும் மோசமாக சொதப்பினார்கள். இதனால் அர்ஜென்டினாவிற்கு நிறைய கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அனைத்தையும் தடுத்தது பிஆர் ஸ்ரீஜேஷ்தான். இந்த போட்டியில் மட்டுமே வரிசையாக மூன்று முறை பெனால்டி கார்னர் ஷாட்களை தடுத்து இந்திய அணியை பிஆர் ஸ்ரீஜேஷ் காப்பாற்றினார்.
கேரளா
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் பிஆர் ஸ்ரீஜேஷ். இதனால் மொத்த கேரளா மண்ணும் இவரை கொண்டாடி வருகிறது. பிஆர் ஸ்ரீஜேஷ் ஆட்டத்தால் இந்தியா 49 வருடங்களுக்கு பின் ஒலிம்பிக் செமி பைனலுக்கு செல்வதை கேரளா உற்சாகமாக கொண்டாடி வருகிறது. முக்கியமாக இந்தியாவின் வெற்றிக்கு இவர் முக்கிய காரணமாக இருந்ததால் கேரள மக்கள் பிஆர் ஸ்ரீஜேஷை பாராட்டி வருகிறார்கள்.
தமிழ்நாடு
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டு ஹாக்கி ரசிகர்களும் இவரை கொண்டாடி வருகிறார்கள். ஹாக்கியில் தமிழ்நாட்டு அணிக்காக தேசிய போட்டிகளில் பிஆர் ஸ்ரீஜேஷ் ஆடி இருக்கிறார். இப்போதும் கூட இவர் தமிழ்நாடு ஹாக்கி கழகத்தின் பதிவு செய்யப்பட்ட வீரர்தான். அதிகாரபூர்வமாக இவர் தமிழ்நாடு வீரரே. அதோடு தமிழ்நாட்டில்தான் இவரின் ஹாக்கி புதிய உயரம் தொட்டது. இந்திய அணிக்கு இவர் தேர்வாக சென்னையில் மேற்கொண்ட பயிற்சிகள் காரணமாக இருந்தது.
இந்திய ஓவர்சீஸ் வங்கி
இந்திய ஓவர்சீஸ் வங்கியில் சென்னையில் பணியாற்றி, ஹாக்கி அணியில் ஆடி அதன் மூலம் தேசிய அளவில் பிஆர் ஸ்ரீஜேஷ் கவனிக்கப்பட்டார். இதன் காரணமாகவே இப்போதும் இவர் தமிழ்நாட்டு வீரராக பார்க்கப்படுகிறார் . தமிழ்நாடுதான் எனக்கு நிறைய அடையாளங்களை கொடுத்தது. தேசிய போட்டிகளில் ஆட வேண்டும் என்றால் எப்போதும் தமிழ்நாட்டிற்காக மட்டுமே ஆடுவேன் என்று முன்பு பிஆர் ஸ்ரீஜேஷ் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்காக ஸ்ரீஜேஷ் கடந்த சில வருடங்களாக மிக சிறப்பாக ஆடி வருகிறார். கேப்டனாக இருந்த போதே இந்திய அணிக்காக இவர் நன்றாக ஆடினார். அதேபோல் கேப்டன்சி இல்லாமலும் ஒரு கீப்பராக மிக சிறப்பாக ஆடி வந்தார். தமிழ்நாட்டில் இருந்து வெளியேறி தற்போது இவர் கேரளாவில் குடியேறிவிட்டார். ஆனாலும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்காக ஆட விருப்பம் உள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்
உதவி
வரும் நாட்களில் தேசிய அளவிலான போட்டிகளில் இவர் மீண்டும் தமிழ்நாட்டிற்கு ஆட அதிக வாய்ப்புகள் உள்ளன.அதோடு ஆசிய கோப்பை போட்டிகள் உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி வெல்லும் போது பிஆர் ஸ்ரீஜேஷ் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையை பெறுவதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு சார்பாக இவருக்கும். இந்த நிலையில்தான் இந்திய ஹாக்கி அணி செமி பைனலுக்கு சென்றதை கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களும் கொண்டாடி வருகிறது.இவரை விட சிறந்த ஹாக்கி மாற்று கீப்பர் தற்போது இந்திய அணியிடம் இல்லை. இவருக்கு காயம் ஏற்பட்டால் அது பெரிய அளவில் இந்திய அணிக்கு சிக்கல் ஆகும் என்ற நிலையே உள்ளது. இதனால் இந்திய ஹாக்கி அணியின் முக்கியமான வீரர்களில் முக்கியமானவராக இவர் உருவெடுத்துள்ளார்.