டோக்கியோ: ஒலிம்பிக் 2020 பெண்கள் ஹாக்கி தொடரில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. கிரேட் பிரிட்டனுக்கு எதிராக 4:3 கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.
ஒலிம்பிக் 2020 தொடர் இந்திய ஹாக்கி அணிகளுக்கு மிகவும் சிறப்பான தொடராக அமைந்துள்ளது. ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் நேற்று ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. இந்திய ஆண்கள் ஹாக்கி வரலாற்றில் இது மிக முக்கியமான வெற்றியாகும்.
41 ஆண்டுகளுக்கு பின் இதன் மூலம் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கியது. நேற்று பரபரப்பாக ஆட்டத்தில் 5:4 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒலிம்பிக் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாக இந்திய ஆண்கள் அணி உருவெடுத்துள்ளது. ஒலிம்பிக்கில் மொத்தமாக இதுவரை எட்டு தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் உட்பட 12 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்த நிலையில் இன்று பெண்கள் ஹாக்கி அணி கிரேட் பிரிட்டன் அணியை வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் எதிர்கொண்டது. இந்திய பெண்கள் ஹாக்கி அணி இந்த தொடரில் முதலில் வரிசையாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்து, அதன்பின் லீக் போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்று கஷ்டப்பட்டுதான் காலிறுதி ஆட்டங்களுக்கு வந்தது.
இந்திய பெண்கள் ஹாக்கி அணி செமி பைனல் வரும் என்று பெரிதாக யாரும் கணிக்கவில்லை. கணிப்புகளை பொய்யாக்கி காலிறுதிக்கு வந்த இந்திய பெண்கள் அணி 1:0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக செமி பைனலுக்கு தகுதி பெற்றது. பைனல் செல்லும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் அணி அர்ஜென்டினாவிற்கு எதிராக செமி பைனலில் இந்தியா 2:1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
இன்னொரு பக்கம் செமி பைனல் போட்டியில் தோல்வி அடைந்த கிரேட் பிரிட்டன் அணியை இன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய பெண்கள் அணி எதிர்கொண்டது. இதில் தொடக்கத்தில் ஆட்டம் கொஞ்சம் நிதானமாக சென்றது. பிரிட்டன் அணிக்கு முதல் 12 நிமிடத்தில் 3 முறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய அணியின் கீப்பர் சவிதா புனியா சிறப்பாக செயல்பட்டு கோலை தடுத்தார்.
'ஒலிம்பிக்கிலும் சாதியா?’. மகளிர் ஹாக்கி அணி தோல்வி.. வீராங்கனையின் குடும்பத்தினர் மீது சாதி வன்மம்!
இதன்பின் இந்தியாவிற்கு எதிராக 16வது நிமிடத்தில் பிரிட்டன் அணி முதல் கோல் போட்டது. இந்தியாவின் தீப் கிரேஸ் செய்த தவறால் "செல்ப் கோல்" விழுந்தது. இதனால் இந்தியாவிற்கு எதிராக பிரிட்டன் 1:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின் மீண்டும் வேகம் எடுத்த பிரிட்டன் அணி 23வது நிமிடத்தில் இரண்டாவது கோல் போட்டது. இதன்பின்தான் இந்திய பெண்கள் அணி சிறப்பான கம்பேக் கொடுத்தது.
ஆட்டத்தின் 23 மற்றும் 26வது நிமிடத்தில் இந்தியா வரிசையாக இரண்டு கோல்களை போட்டது. இந்தியாவின் குர்ஜித் கார் இரண்டு கோல் போட்டு அசத்தினார். அதன்பின் ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இந்தியாவின் கட்டாரியா 3வது கோல் போட்டார் . இதனால் முதல் பாதியில் பிரிட்டனுக்கு எதிராக 3:2 என்ற கோல் கணக்கில் இந்தியா லீட் எடுத்தது.
ஆனால் அதன்பின் இரண்டாம் பாதியின் மூன்றாம் கால் ஆட்டத்தில் பிரிட்டன் வரிசையாக இரண்டு கோல்களை போட்டது. 35வது நிமிடத்தில் பிரிட்டன் பெனால்டி கார்னரில் 3வது கோல் போட்டது. பின்னர் 46வது நிமிடத்தில் பிரிட்டன் பெனால்டி கார்னரில் 4வது கோல் போட்டது. இதனால் பிரிட்டன் 4:3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின் இந்தியா கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தது.
ஆனால் கடைசி வரை இந்தியாவால் பிரிட்டன் ஸ்கோரை சமன் செய்ய முடியவில்லை. இதனால் பிரிட்டன் 4:3 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெண்கலம் வென்றது. முதல்முறையாக செமி பைனல் சென்ற இந்திய பெண்கள் அணி பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.