தள்ளி வைப்பு
கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் தொடர் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2021 ஜூலை 23 அன்று ஒலிம்பிக் தொடர் துவங்கும் என ஜப்பான் பிரதமர் இரு மாதங்களுக்கு முன் அறிவித்தார். ஆனால், அடுத்த ஆண்டாவது ஒலிம்பிக் தொடர் நடக்குமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தீர்வு
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மார்ச் மாதத்தில் ஐரோப்பியாவில் உச்சம் அடைந்தது. அதன் பின் ஒவ்வொரு நாட்டிலும் பரவி, தற்போது தினமும் பரவும் வேகம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கும் வரை அதற்கு தீர்வு இல்லை என்றே கூறப்படுகிறது.
ஓராண்டு ஆகும்
தற்போது மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல நாடுகள் இறங்கி உள்ளன. தடுப்பு மருந்து புழக்கத்துக்கு வர ஓராண்டு காலமாவது ஆகலாம் என கூறப்படுகிறது. அதனால், அடுத்த ஆண்டு ஜூலையில் ஒலிம்பிக் தொடர் நடக்க வாய்ப்பு இல்லை என்று பெரும்பாலான ஜப்பான் மக்களே கருதுவதாக ஒரு கருத்துக் கணிப்பு முடிவு கூறுகிறது.
வீரர்கள் நிலை
இதற்கிடையே கடந்த ஓராண்டாக ஒலிம்பிக் தொடருக்கு தயார் ஆகி வந்த வீரர்கள், தற்போது மேலும் ஓராண்டு பயிற்சி செய்ய வேண்டும். அதிக பயிற்சி நல்லதுதான். ஆனாலும், லாக்டவுன் உள்ளிட்ட சுகாதார, பாதுகாப்பு சிக்கல்களால் பயிற்சி செய்யும் வாய்ப்பு பல வீரர்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் ஒலிம்பிக் தொடருக்கு எப்படி முழு திறனுடன் செல்ல முடியும் என கவலையில் உள்ளனர்.
Recommended Video
நஷ்டம்
ஒலிம்பிக் தொடரை தள்ளி வைத்ததால் மட்டுமே பல கோடி நஷ்டம் ஆகி உள்ளது. அதை ரத்து செய்தால் மேலும் பல ஆயிரம் கோடி நஷ்டம் ஆகும். 2020 ஒலிம்பிக் தொடர் நடக்குமா? என்பதை அறிய நாம் ஓராண்டு காத்திருக்க வேண்டும்.