தொடக்கமே சிறப்பு
பாரா ஒலிம்பிக்கின் 12வது நாளான இன்று தொடக்கத்திலேயே இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்தது. துப்பாக்கிச்சுடுதலில் 50மீட்டர் பிஸ்டல் SH1 பிரிவின் இறுதிப்போட்டியில் இன்று காலை இந்திய வீரர்கள் சிங்ராஜ், மணிஷ் நார்வால் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதில் மணிஷ் நார்வால் தங்கப்பதக்கமும், சிங்ராஜ் வெள்ளிப்பதக்கமும் வென்றிருந்தனர்.
மேலும் 2 பதக்கங்கள்
இந்நிலையில் தற்போது பேட்மிண்டன் பிரிவிலும் இந்திய அணிக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. ஆடவர் பேட்மிண்டன் பிரிவில் இறுதிப்போட்டி இன்று மதியம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரமோத் பாகட், இங்கிலாந்தின் டேனியல் பெதெல்லை எதிர்கொண்டார்.
சிறப்பான கம்பேக்
இந்த போட்டியின் தொடக்கம் முதலே பிரமோத்தின் ஆதிக்கமே இருந்தது. இதனால் முதல் செட்டை 21 - 14 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். 2வது சுற்றில் சுதாரித்துக்கொண்ட டேனியல் பெத்தெல், 4 - 11 என்ற புள்ளிக்கணக்கில் முதலில் முன்னிலை வகித்தார். ஆனால் கடுமையாக போராடிய பிரமோத் 2வது செட்டின் இறுதியில் 17 - 15 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். இதனால் 21 - 14, 17 - 15 என்ற நேர் செட் கணக்கில் அவர் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
மனோஜ் சர்கார்
இதே போல இன்று ஆடவர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் மனோஜ் சர்கார், ஜப்பானின் டாய்சுகேவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவின் மனோஜ் 22 - 20, 21 - 13 என்ற நேர் செட் கணக்கில் அபாரமாக வென்றார். இதனால் அவர் தனது வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தார்.
பதக்க பட்டியல்
இன்று காலை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் 2 பதக்கங்களை தட்டிச்சென்ற நிலையில் இன்று மதியமே பேட்மிண்டன் போட்டியிலும் இந்திய வீரர்கள் 2 பதக்கங்களை வென்றுள்ளனர். குறிப்பாக இன்று இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது. இதன் மூலம் பதக்கப்பட்டியலில், 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் 25வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.