பதக்க வேட்டையாடும் இந்தியா
அதிகப்படியான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றது மட்டுமின்றி அதிகப்படியிலான பதக்கங்களையும் வென்று குவித்து வருகின்றனர். நேற்றைய தினம் வரை இந்திய அணி 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் இருந்து வந்தது. துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அவனி லெகாரா ஒரு தங்கம், ஒரு வெள்ளி என 2 பதக்கங்களை வென்று அசத்தினார்.
தொடக்கமே சிறப்பு
இந்நிலையில் பாரா ஒலிம்பிக்கின் 12வது நாளான இன்று தொடக்கத்திலேயே இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. துப்பாக்கிச்சுடுதலில் 50மீட்டர் பிஸ்டல் SH1 பிரிவின் இறுதிப்போட்டி இன்று காலை நடைபெற்றது. 8 வீரர்கள் தேர்வான இந்த இறுதிச்சுற்றில் இதில் இந்திய வீரர்கள் சிங்ராஜ், மணிஷ் நார்வால் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதில் இருவருமே பதக்கம் வென்று அசத்தினர்.
விறுவிறுப்பான போட்டி
ஆட்டத்தின் முதல் சுற்றில் இந்தியாவின் சிங்ராஜ் 92.1 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருந்தார். மணிஷ் 87.2 புள்ளிகளுடன் 5வது இடத்தை பிடித்தார். அடுத்தடுத்த சுற்றுகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. முதலிடத்தில் இருந்த சிங்ராஜ் 3வது இடத்திற்கும் 5வது இடத்தில் இருந்த மணிஷ் 2வது இடத்திற்கும் முன்னேறினர்.
தங்கம், வெள்ளி
இறுதியில் மணிஷ் நார்வால் 218.2 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதே போல சற்று சரிவை கண்ட சிங்ராஜ் 216.7 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். ரஷ்யாவை சேர்ந்த சேர்கேவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. இதனால் இந்த தொடரில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 34வது இடத்தை பிடித்துள்ளது.
பிரதமர் மோடி வாழ்த்து
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெருமை தொடர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவின் மணிஷ் நார்வால் தங்கப்பதக்கம் வென்று பெரும் சாதனை படைத்துள்ளார். அவர் தங்கப்பதக்கம் வென்றது, இந்தியாவுக்கு பெருமையான தருணம். அவரின் எதிர்காலத்திற்கு வாழ்த்துகள் என புகழ்ந்துள்ளார்.