டெல்லி: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் சார்க் நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நரேந்திரமோடி அந்தந்த நாடுகள் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. இதில் தெற்காசியாவை சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
Spoke to President @ashrafghani, PM Sheikh Hasina, PM Nawaz Sharif & President Sirisena. Conveyed my best wishes for the Cricket World Cup.
— Narendra Modi (@narendramodi) February 13, 2015
இதனிடையே நரேந்திரமோடி, ஆப்கன் அதிபர், அஷ்ரப் கானி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்தந்த நாட்டு கிரிக்கெட் அணிகள் சிறப்பாக விளையாட வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோடி டிவிட்டரில் கூறுகையில், "ஐந்து சார்க் நாடுகளுமே கிரிக்கெட் விளையாட்டின் மீது அபார ஆர்வம் கொண்டவை. இந்த உலக கோப்பை விளையாட்டின்போது ரசிகர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும் என்று நம்புகிறேன். கிரிக்கெட் விளையாட்டு இந்த பிராந்தியத்தின் மக்களை வெகுவாக இணைத்து வருகிறது. சார்க் மண்டல நாடுகளின் வீரர்கள் சிறப்பாக விளையாடி, இந்த பிராந்தியத்தின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவருவார்கள் என்று நம்புகிறேன்.
விரைவிலேயே இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளரை சார்க் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய அனுப்பி வைக்க உள்ளேன். இதன்மூலம் சார்க் நாடுகளுக்கிடையே உறவு மேம்படுத்தப்படும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
ஏற்கனவே, டிவிட்டர் மூலமாக, இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தனித்தனியாக மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். சார்க் நாடுகளின் ஒற்றுமைக்காக கிரிக்கெட்டை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு மோடி சார்க் நாடு தலைவர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.