மகிழ்ச்சிக்கு அளவே இல்லை
அதேபோல், பல வருடங்களுக்கு பிறகு, ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதி வரை முன்னேறியது. லீக் போட்டிகளில் 3 வெற்றிகள், காலிறுதியில் அபார வெற்றி என வலிமையான அணியாக அரையிறுதியில் இன்று களமிறங்கியது. இந்தியா பெல்ஜியம் அணியை எதிர்த்து மோதியது. ஆனால் 5 - 2 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே பெல்ஜியம் அணியின் லூயிபார்ட் முதல் கோல் அடித்து 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற வைத்தார். இதற்கு பதிலடியாக, ஏழாவது நிமிடத்தில் இந்திய அணியின் ஹர்மன்தீப் சிங் முதல் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1 - 1 என சமநிலை பெற்றது. பிறகு, இந்தியாவின் நட்சத்திர வீரர் மன்பிரீத் சிங் எட்டாவது நிமிடத்தில் அடுத்த கோல் அடிக்க, இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்றது. ஒவ்வொரு இந்திய ரசிகர்களின் நெஞ்சமும் பட்ட மகிழ்ச்சிக்கு அப்போது அளவே இல்லை.
இந்தியா தோல்வி
ஆனால், அதன்பிறகு நடந்தவை அனைத்தும் இந்திய வீரர்களும், ரசிகர்களும் தங்கள் நினைவுகளில் இருந்து மறக்க, அழிக்க விரும்புபவை. கடைசி 15 நிமிடங்களில் பெல்ஜியம் அணிக்கு அடுத்தடுத்து பெனால்டி வாய்ப்புகளை கிடைக்க, தொடர்ந்து 3 கோல்களை அடித்து அந்த அணி 5 - 2 என வலுவான நிலைக்கு சென்றது. ஆட்டமே தலைகீழாய் மாறியது. பிரதமர் மோடி இந்த ஆட்டத்தை டிவியில் நேரலையாக பார்த்து ரசித்திருக்கிறார். தோல்விக்கு பிறகு அவர் தனது ட்விட்டரில், "வெற்றியும், தோல்வியும் வாழ்வில் சகஜமான ஒன்று. டோக்கியோ ஒலிம்பிக்கில் நமது இந்திய அணி முழுமையான திறமையையும் வெளிப்படுத்தியது. அவர்களின் அடுத்த போட்டிக்கு (வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி) வாழ்த்துக்கள். ஹாக்கி வீரர்களை நினைத்து இந்தியா பெருமைக்கொள்கிறது" என தெரிவித்துள்ளார்.
பாராட்டு
அதுமட்டுமின்றி, போட்டி முடிந்தவுடனேயே இந்திய அணி கேப்டன் மன்ப்ரீத் சிங்கிற்கு, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார், அப்போது, அரையிறுதிப்போட்டி குறித்து பாராட்டுகளை தெரிவித்ததாகவும், போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதாகவும் பாராட்டியுள்ளார். அடுத்து வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஆகஸ்ட் 5ம் தேதி இந்திய அணி விளையாட வேண்டும். ஒருவேளை அந்த போட்டியில், இந்திய அணி வெற்றிப் பெற்றால், 41 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் எந்த பதக்கமும் வெல்லாமல் இருக்கும் இந்திய ஹாக்கி டீம், இந்த முறை வெண்கலப்பதக்கத்துடன் நாடு திரும்பும். அதேசமயம், இந்திய பெண்கள் ஹாக்கி அணி நாள் அரையிறுதிப் போட்டியில் விளையாடுகிறது. ஆண்கள் அணி சறுக்கியதால், பெண்கள் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அப்படி ஒருவேளை நடந்தால், அது வரலாற்றில் பொன் எழுத்துக்களாக பொறிக்கப்படும். காலிறுதிப் போட்டியில், இந்திய அணியின் கோல் கீப்பர் சவிதா ஏகப்பட்ட பெனால்டி கோல் வாய்ப்புகளை தடுத்து நிறுத்தியதால் தான் இந்திய மகளிர் அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 3 முறை ஒலிம்பிக் சாம்பியன்களான ஆஸ்திரேலிய அணியை, இந்திய அணி வெளியேற்றியதற்கு சவிதா தான் மிக முக்கியமான காரணமாக இருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக
இந்நிலையில், "தோற்றாலும் மீசையை முறுக்கு" மோடில் இருக்கும் ஹாக்கி அணி மற்றும் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களயும் வரும் சுதந்திர தினத்தன்று (ஆக.15) செங்கோட்டைக்கு சிறப்பு விருந்திராக பிரதமர் மோடி அழைத்திருக்கிறார். அப்போது, ஒவ்வொரு வீரர்களையும் பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து உரையாடவிருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.