போபால்: செல்பி எடுக்க முற்பட்ட போது தவறி குளத்தில் விழுந்த தேசிய தடகள வீராங்கனை பூஜா குமாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது டிரிபிள் ஜம்ப் வீராங்கனை பூஜா குமாரி. இவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) அகாடமியில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டு விளையாடியுள்ள இவர், டெல்லியில் நடைபெற்ற சப்-ஜூனியர் தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஆனால், தற்போது காயம் காரணமாக அவர் போட்டிகளில் பங்கேற்காமல் பயிற்சி மட்டும் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை பயிற்சியை முடித்து சக வீராங்கனைகள் இருவருடன் முகாமில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு பின்பக்கம் சென்றுள்ளார். அங்கு மழை நீரை சேமித்து வைக்கும் குளத்தின் வடிகால் அருகில் அவர் செல்பி எடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக நீரில் அவர் வழுக்கி விழுந்தார். பூஜாவுக்கு சரிவர நீச்சல் தெரியாததால் அவரால் நீந்தி வெளியேற முடியவில்லை. இதனால் அவர் நீரில் மூழ்கினார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள் உடனடியாக ஹாஸ்டலுக்குச் சென்று உதவி கோரியுள்ளனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் குளத்தில் மூழ்கி பூஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த வீரர்களிடமும், சாய் அதிகாரிகளிடமும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறந்த தடைதாண்டி ஓடும் வீராங்கனையாக இருந்த பூஜா குமாரி, செல்பி மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்தது மற்ற வீரர், வீராங்கனைகளிடையே பெரிய சோத்தை ஏற்படுத்தியுள்ளது.