சேலம்: ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டு தபால் துறை சிறப்பித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தின் மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். மாரியப்பன் டெல்லியில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் விளையாட்டுத்துறையினர் வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய மாரியப்பன், அடுத்த பாராலிம்பிக்கிலும் தங்கம் வெல்ல முயற்சி செய்வதாக கூறினார்.
சென்னையில் இருந்து சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டிக்கு சென்ற மாரியப்பனுக்கு உறவினர்கள், நண்பர்கள், ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் படித்த பெரியவடகம்பட்டி பள்ளியில் அவர் பெயரில் தபால் தலை வெளியிடப்பட்டது.
மை ஸ்டாம்ப் என்ற திட்டத்தின்கீழ் சேலம் தபால் துறை சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.