சென்னை : இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதித்துள்ளார்.
உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் மும்பையில் நடைபெற்றது. அதில் அண்டர் 18 பிரிவில் பங்கேற்ற பிரக்ஞானந்தா அபாரமாக வெற்றிகளை குவித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் முதன்முறையாக இந்தியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரில் பல நாடுகளை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட இளம் செஸ் வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்த தொடரில் அண்டர் 18 பிரிவில் பங்கேற்றார் பதினான்கு வயதே ஆன பிரக்ஞானந்தா. அவர் பங்கேற்ற பிரிவில் 11 சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. அதில் முதல் பத்து போட்டிகளில் அவர் 7 வெற்றிகள் மற்றும் 3 டிரா செய்து இருந்தார்.
இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் வேலன்டின் என்ற ஜெர்மானிய வீரரை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. இந்தப் போட்டியில் டிரா செய்தாலே சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற நிலையில், போட்டியை டிரா செய்தார் பிரக்ஞானந்தா.
இதன் மூலம் 7 வெற்றிகள், 4 டிரா செய்து அதிக புள்ளிகள் பெற்று அண்டர் 18 உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தா. முன்னதாக இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன இவர், தற்போது சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தி இருக்கிறார்.
முதன் முறையாக இந்தியாவில் நடைபெறும் சர்வதேச தொடர் ஒன்றில் சாம்பியன் பட்டம் வென்று சொந்த மண்ணில் சாதித்து இருக்கிறார் பிரக்ஞானந்தா.