71ல் பிறந்து
1971ம் ஆண்டு பிறந்தவர் தாம்பே. அதாவது சச்சின் டெண்டுல்கருக்கு முன்பே பிறந்தவர். ஆனால் சச்சின் ஓய்வு பெற்ற பிறகுதான் இவர் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்
இவர் தனது 41வது வயதில்தான் ஐபிஎல்லுக்கு விளையாட வந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 2013ல் இவர் ஜெய்ப்பூரில் நடந்த டெல்லி டேர்டெவில்ஸ் போட்டியில் அறிமுகமாகி விளையாட்டுக் களத்தில் குதித்தார்.
ஆள் குட்டைதான்.. ஆனாலும் பவுலிங்கில் கெட்டி
ஆள் பார்க்க கட்டையாக, குட்டையாக இருந்தாலும் பந்து வீச்சில் பின்னுகிறார் தாம்பே. ஆரம்பத்தில் இவர் வேகப் பந்து வீச்சாளராக வர நினைத்தாராம். ஆனால் பின்னர் சுழற்பந்து வீச்சாளராகி விட்டார்.
சிவாஜி பார்க் ஜிம்கானா டீம்
மும்பையில் உள்ள சிவாஜி பார்க் ஜிம்கானா அணியில் தாம்பேவும் ஒருவராக இருந்தவர். அப்போது சந்தீப் பாட்டீல் இவரது பந்து வீச்சைப் பார்த்து வியந்து போனார்.
டிராவிட் புண்ணியத்தால்
ஆனால் இவருக்கு எந்த ஒரு ஏற்றமும் கிடைக்கவில்லை. நிறையத் திறமைகள் மிகுந்தவராக இருந்தும் கூட ஒரு முறை கூட இவர் இந்திய அணியில் ஆடியதில்லை. சேர்க்கப்பட்டதில்லை. இத்தனைக்கும் இவரை சச்சின் டெண்டுல்கருக்கும் நன்றாக தெரியும். நிறைய மும்பை ஜாம்பவான்களுக்கும் தெரியும். ஆனாலும் இவர் எடுபடாமல் போய் விட்டார். காணப்படாமல் போய் விட்டார். டிராவிட் புண்ணியத்தால் தற்போது இவர் மீதும் வெளிச்சம் பட்டுள்ளது.
2013ல்தான் லைம்லைட்டுக்கு
2013ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிதான் இவரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அந்தத் தொடரில் இவர் அசத்தினார். மேலும் அதிக விக்கெட்களை வீழ்த்தியதற்கான கோல்டன் விக்கெட் விருதையும் வென்றார்.
7வது தொடரில் கலக்கல்
ஆனால் தற்போதைய ஐபிஎல் தொடரில் தாம்பே பிரமாதப்படுத்தி விட்டார். இவர் விக்கெட் எடுக்காமல் போனதே இல்லை. அதிலும் முக்கியமான பல விக்கெட்களை வீ்ழ்த்தி அசத்தியுள்ளார். பத்துக்கும் மேற்பட்ட விக்கெட்களைச் சாய்த்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.. எதிரணியினரை வியர்க்க வைத்து விட்டார்.
ஏன் இந்தத் தாமதம்.. ?
ஆனால் இப்படிப்பட்ட திறமைசாலி பவுலரை ஏன் இந்திய அணியில் ஒருமுறை கூட சேர்க்கவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.