கூடுதல் கண்காணிப்பாளர்
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வெல்வதற்கு முன்பு, ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்டராக வேலைப்பார்த்து வந்தவர் மீராபாய் சானு. ஆனால், அவர் மெடல் வென்ற பிறகு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக நியமித்து மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் உத்தரவிட்டார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், "மீராபாய் சானு தற்போது செய்துவரும் ரயில்வே துறையில் இருக்கும் பணியிலிருந்து விடுவித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். அவருக்கு மணிப்பூர் அரசு சார்பில் போலீஸ் துறையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக (விளையாட்டுக்கோட்டா) பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ரூ.2 கோடி
சானு இனிமேல் மணிப்பூர் போலீஸ் துறையில் இணைந்து பணியாற்றலாம். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்குத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு தங்கப்பதக்கம் வெல்ல முயற்சிக்கலாம்" என்று அறிவித்தார். இது மட்டுமின்றி, வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு ரயில்வே துறை சார்பில் அமைச்சர் அஸ்வினி வைஷ்வன் ரூ.2 கோடி பரிசு அறிவித்துள்ளார்.
உந்து சக்தி
இதுகுறித்து மத்திய அமைச்சர் வைஷ்னவ் தனது ட்விட்டரில், "இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த ரயில்வே வீராங்கனை மீராபாய் சானுவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை கவுரவப்படுத்தும் விதமாக ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும், அவருக்கு பதவி உயர்வும் வழங்கப்படும். அவர் தனது திறமையால் உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு உந்து சக்தியாக திகழ்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
நாடே திருவிழா தான்
பாருங்க. இந்தியாவுக்கு இதுவரை கிடைத்தது ஒரேயொரு பதக்கம் தான். அதற்கே நாம் இவ்வளவு கொண்டாடுகிறோம். அதுவே, நாம் அமெரிக்கா, சீனா போன்று பதக்கங்களை குவித்தால், நாடே திருவிழா மயமாகிவிவிடும். அந்த நாள் எப்போது வரும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின், ரசிகர்களின் கனவாக உள்ளது. ஆனால், இன்றைய சூழலில், ஒரு தங்கம் வெல்வதே இந்தியாவின் கனவாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.