மத்திய அரசு தடை
பப்ஜி (PUBG) என்ற மொபைல் விளையாட்டுக்கு சில மாதங்கள் முன்பு மத்திய அரசு தடை விதித்து இருந்தது. பல சீன நிறுவன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட போது அதில் பப்ஜியும் சிக்கியது. அதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்தியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய சட்டம்
மீண்டும் அந்த விளையாட்டை இந்தியாவில் கொண்டு வர வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் புதிய வடிவத்தில் அந்த விளையாட்டு வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் ஒன்று அதை கேள்விக் குறியாக மாற்றி உள்ளது.
வாங்க முடியாது
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆன்லைன் சூதாட்டத்தை பயன்படுத்தவோ, அரங்கம் அமைத்து ஆடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் காரணமாக ஆன்லைன் கேம்களில் விற்கப்படும் ஆட்-ஆன்களை வாங்க முடியாது எனவும் கூறப்படுகிறது.
வருமானத்தை இழக்கும்
அப்படி ஆட்-ஆன் வாங்க முடியவில்லை என்றால் பப்ஜி உள்ளிட்ட ஏராளமான ஆன்லைன் விளையாட்டுக்கள் தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் வருமானத்தை இழக்கும். விரைவில் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் இதே போன்ற சட்டம் வர உள்ளதாக கூறப்படும் நிலையில் இது பெரிய சிக்கலாக மாறி உள்ளது.
டோர்னமென்ட் சிக்கல்
மேலும், பப்ஜி உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் டோர்னமென்ட்களை நடத்தி வருகின்றன. அதில் வெற்றி பெற்றால் பல லட்சங்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகின்றது. அதற்கும் தடை பொருந்தும். மத்திய அரசு விதித்த தடையை தாண்டி வர இருந்த பப்ஜிக்கு தமிழ்நாட்டு சட்டத்தால் சிக்கல் எழுந்துள்ளது.
சோகம்
பப்ஜி தடையால் சோகத்தில் இருந்த அதன் கோடிக்கணக்கான ரசிகர்கள் மீண்டும் அந்த விளையாட்டு எப்போது வரும் என காத்துக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது பப்ஜியின் வருமானத்தில் கை வைக்கப்பட்டுள்ளதால் அந்த விளையாட்டு மீண்டும் வெளிவருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முழு தடை இல்லையா?
ஆன்லைன் சூதாட்டத்தால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தான் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆன்லைன் சூதாட்டம் விளையாட தடை விதித்தாலும், அந்த விளையாட்டுக்களுக்கு ஏன் நேரடியாக தடை விதிக்கவில்லை என சிலர் கேள்வி எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.