2019ல் பட்டம் வென்ற பிவி சிந்து
உலக பேட்மிண்டன் சாம்பியன் தொடர் கடந்த 2006 முதல் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வீராங்கனை பிவி சிந்து சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றார். இதன்மூலம் இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கும் நாட்டிற்கும் கிடைத்தது.
மற்ற போட்டிகள் பாதிப்பு
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டில் ஜூலை மாதத்தில் டோக்கியோவில் நடத்தப்பட இருந்த ஒலிம்பிக் போட்டிகள், அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மற்ற போட்டிகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பேட்மிண்டன் உலக கோப்பை தொடரும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தள்ளி போகும் வாய்ப்பு
இந்த ஆண்டு தொடர் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டின் உலக பேட்மிண்டன் சாம்பியன் தொடரும் ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 2022ம் ஆண்டிற்கு உலக பேட்மிண்டன் சாம்பியன் தொடர் தள்ளி போகும் சூழல் உருவாகியுள்ளது.
2022 வரை உலக சாம்பியன்
இந்நிலையில் விரும்பியோ விரும்பாமலே, பிவி சிந்து, வரும் 2022 வரை உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து கைகொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இந்த போட்டிகளை நடத்த அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை அவகாசம் இல்லை என்று உலக பேட்மிண்டன் சங்கம் தெரிவித்துள்ளது.
போட்டிகள் நடத்தப்பட வேண்டும்
இந்நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு போட்டியில்லாமலேயே தான் சாம்பியன் என்பதை பிவி சிந்து வரவேற்கவில்லை. அவரை பொருத்தவரையில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது. ஒலிம்பிக் உள்ளிட்டவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதே அனைத்து விளையாட்டு வீரர்களின் விருப்பமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.