13 வயதில் தேசிய சாதனை
பிலாவுள்ளகண்டி தெக்கப்பரம்பில் உஷா சுருக்கமாக பி.டி உஷா கோழிக்கோட்டின் பய்யொலியில் கடந்த 1964ல் பிறந்தவர். தனது 13வது வயதிலேயே தனது சாதனை ஓட்டத்தை தேசிய தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று துவக்கி, முதல் தேசிய சாதனையை படைத்தார். தொடர்ந்து பல்வேறு தேசிய போட்டிகளில் பங்கேற்று கவனம் ஈர்த்த அவரது கவனம் சர்வதேச போட்டிகளின் பக்கம் திரும்பியது.
பதக்க வாய்ப்பு இழப்பு
இவரது முதல் சர்வதேச போட்டி மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி. இதில் பதக்க வாய்ப்பை இழந்தாலும் அடுத்ததாக 1982ல் டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளின் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டங்களில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்று தன்னுடைய பதக்க வேட்டையை துவக்கி வைத்தார்.
400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம்
தொடர்ந்து குவைத்தில் நடைபெற்ற சாம்பியன் தடகள போட்டியின் 400 மீட்டர் ஓட்டத்தில் ஓடி தங்கப்பதக்கத்தை வென்று சாதனையை தொடர்ந்தார். ஆனால் 1984ல் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டியில் 100ல் ஒரு நொடி வித்தியாசத்தில் பதக்கத்தை தவறவிட்டார். ஆயினும் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை உஷாவிற்கு கிடைத்தது.
தங்கம்... வெண்கலம்
இதையடுத்து 1986ல் சியோலில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம் என அனைத்திலும் பங்கேற்று தங்கம் மற்றம் வெண்கல பதக்கங்களை பெற்றார். இதை பாராட்டி மத்திய அரசு இவருக்கு 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கியது.
இந்தியாவின் தங்க மங்கை
தொடர்ந்து ஆசிய போட்டிகளில் கொடிகட்டிப் பறந்த பி.டி உஷாவிற்கு ஆசிய தடகள ராணி என்ற பட்டமும் கிடைத்தது. மேலும் இந்தியாவின் தங்க மங்கை, பய்யொலி எக்ஸ்பிரஸ் என பல்வேறு பட்டப்பெயர்களால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் பி.டி. உஷா. கடந்த 1983 முதல் 1989 வரை பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்று விளையாடிய உஷா, 13 தங்க பதக்கங்களை குவித்தார்.
100க்கும் மேற்பட்ட பதக்கங்கள்
விளையாட்டே தனது மூச்சாக இருந்த பி.டி. உஷா, கடந்த 1991ல் ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து 3 ஆண்டுகள் விளையாட்டிலிருந்து ஒதுங்கியிருந்த அவர், கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஊக்கத்தையடுத்து சர்வதேச போட்டிகளில் மீண்டும் பங்கேற்று விளையாடினார். 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகள்
இதையடுத்து கடந்த 2000ல் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தடகள போட்டிகளில் கோலோச்சிய பி.டி. உஷாவிற்கு, அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இளம் வீராங்கனைகளுக்கு உந்துசக்தியாக விளங்கும் அவர் தற்போதும், இளம் வீராங்கனைகளுக்கு தடகளத்தில் பயிற்சி அளித்து வருகிறார்.