காரணத்தை கூறினார்
அண்டர்டேக்கர் ஓய்வு முடிவை அறிவிக்க என்ன காரணம் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அவர் கடைசியாக WWE நெட்வொர்க்கில் "தி லாஸ்ட் ரைடு" என்ற நிகழ்ச்சியில் தன் ரெஸ்லிங் அனுபவங்களை பகிர்ந்து வந்தார். அதன் முடிவில் தன் ஓய்வுக்கான காரணத்தை கூறி உள்ளார்.
30 ஆண்டுகள்
அண்டர்டேக்கர் கடந்த 1990 முதல் WWE ரெஸ்லிங் போட்டிகளில் பங்கேற்று வந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல் தளர்ந்து போனது. அவரால் முன்பு போல வீரியத்துடன் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. அதனால், ஒவ்வொரு ஆண்டும் அவர் ஓய்வு பெறப் போவதாக வதந்திகள் கிளம்பின.
போனியார்ட் மேட்ச்
எனினும், ஒரு சில போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வந்தார் அண்டர்டேக்கர். இந்த நிலையில், கடந்த ரெஸ்ஸில்மேனியா 36 தொடரில் போனியார்ட் மேட்ச்சில் பங்கேற்றார். ரிங்கில் நடக்காமல், வெளிப்புறத்தில் நடந்த அந்த போட்டியில் ஏஜே ஸ்டைல்ஸ்-ஐ வீழ்த்தி இருந்தார் அவர்.
ஓய்வு அறிவிப்பு
அந்தப் போட்டியுடன் அண்டர்டேக்கர் ஓய்வு பெற்று விடுவார் என சிலர் கூறினர். ஆனால், WWE நிறுவனம் அவரை அத்தனை எளிதில் ஓய்வு பெற விடாது என முந்தைய அனுபவங்களை வைத்து சிலர் கூறினர். இதற்கிடையே அண்டர்டேக்கர் ரெஸ்லிங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இன்னும் சில ஆண்டுகள்
அண்டர்டேக்கர் விரும்பி இருந்தால் நிச்சயம் இன்னும் சில ஆண்டுகளுக்கு போட்டிகளில் பங்கேற்று இருக்க முடியும். WWE நிறுவனம் அவர் மீது தனி மதிப்பு வைத்துள்ளது. எனினும், அவர் இந்த முடிவை எடுக்க காரணம் என்ன என்பது பற்றி கூறி உள்ளார்.
எனக்கு இரண்டு குடும்பம்
எனக்கு இரண்டு குடும்பம் கிடைத்ததற்கு ஆசிர்வதிக்கப்பட்டு இருக்க வேண்டும். என் மனைவி, குழந்தைகள் ஒன்று. மற்றொன்று என் பயணத்தில் கிடைத்தது என குறிப்பிட்டு தன்னுடன் ரெஸ்லிங் ஆடிய பல்வேறு வீரர்களின் பெயர்களை குடும்பம் என குறிப்பிட்டார் அண்டர்டேக்கர்.
நெருக்கமானவர்கள்
அந்த வீரர்கள் தொழில்முறையில் மட்டுமில்லாமல், தனிப்பட்ட முறையிலும் மிகவும் நெருக்கமானவர்களாக இருந்ததாக அண்டர்டேக்கர் கூறினார். தான் இனி கைப்பற்ற ஒன்றுமே இல்லை என்ற நிலையில் இருப்பதாகவும், எதையும் செய்ய வேண்டிய நிலையிலும் தான் இல்லை என்றார்.
ஆட்டம் மாறி விட்டது
இப்போது ஆட்டம் மாறி விட்டது. புதிய வீரர்கள் மேலே வர வேண்டிய நேரம் இது. இதுதான் சரியான நேரம் என தன் ஓய்விற்கு காரணம், இளம் வீரர்களுக்கு வழி விடுவது தான் என கூறினார் அண்டர்டேக்கர். இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.