ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரின் மரக்கானா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் அபினவ் பிந்த்ரா, ககன் நரங் பங்கேற்றனர்.
6 சுற்றுகள் கொண்ட இதில் அபினவ் பிந்த்ரா 625.7 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப் பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் அபினவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான ககன் நரங் 621.7 புள்ளிகளுடன் 23-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் அபினவ் பிந்த்ரா 4-வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
இத்தாலி வீரர் நிக்கோலா கேம்ப்ரியானி 206.1 புள்ளிகள் பெற்று தங்க பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் செர்கிய் குலிஷ் 204.6 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். ரஷ்யா வீரர் விளாடிமிர் மாஸ்லென்னிகோவ் 184.2 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். அபினவ் பிந்த்ரா 163.8 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
அபினவ் பிந்த்ரா, 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் விளையாட்டுப் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற அபினவ் பிந்த்ராவின் சாதனையை இதுவரை எவரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.