இந்தியக்கொடி எங்கே
போட்டியில் பங்கேற்க ரியோ சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்தியாவின் தேசியக்கொடி தவறாக அச்சிடப்பட்டுள்ளது. இந்தியக்கொடியில் உள்ள வெண்மை நிறம் இடம்பெறவில்லையாம். அது தவிர வீரர்கள் அணியும் ஆடைகளில் இந்தியா என்ற பெயர் இடம்பெறாமல் தவறாக அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பங்கேற்கும் இந்திய வீரர்கள்
2004ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜாஜாரியா உள்பட 19 பேர் கொண்ட இந்திய அணியினர் ரியோவுக்கு சென்றுள்ளனர். இதில் பூஜா, தீபா மாலிக், கரம்ஜோதி தலால் ஆகிய வீராங்கனைகளும் அடங்குவர். பாரா ஒலிம்பிக்கில் களம் காணும் இந்தியாவின் அதிகபட்ச எண்ணிக்கையாக இது அமைந்திருக்கிறது.
தடகள வீரர்
பாரா ஒலிம்பிக்கில் அன்குர் தாமா ,22 என்ற பார்வையிழந்த தடகள வீரர் பங்கேற்கவுள்ளார். இந்தியா சார்பில் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் பார்வையிழந்த முதல் தடகள வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். நாடு முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
வீரர்களுக்குப் பரிசு
இதுவரையான பாராஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என்று மொத்தம் 8 பதக்கம் வென்றுள்ளது. இம்முறை இந்திய வீரர்கள் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டியில் தங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு ரூ.75 லட்சம், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினால் ரூ.50 லட்சம், வெண்கலம் பெற்றால் ரூ.30 லட்சம் வீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.