பாடிபில்டர் ரூபி பியூட்டி
இந்த வகையில் ரூபி பியூட்டியை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. மிகச் சாதாரணமான குடும்பப் பின்னணி கொண்டவர்தான் ரூபி பியூட்டி. அப்படிச் சொல்வதைவிட மிக மிக கஷ்டமான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் என்று கூறலாம். இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். தாயின் கஷ்டத்தை நேரில் பார்த்து வளர்ந்தவர். கஷ்டத்துடன் வளர்ந்த காரணத்தால் எந்த சூழ்நிலையிலும் வாழும் திட மனதைப் பெற்றவர்.
சாதனை படைத்த பெண்
இப்படிப்பட்ட இரும்புப் பெண்மணியைப் பற்றித்தான் இன்று பார்க்கப் போகிறோம். பாடிபில்டிங்கில் பெரும்பாலும் ஆண்கள்தான் அதிகம் இருப்பார்கள். அதில் ஈடுபடும் ஆர்வம் கொண்ட பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட ஆணாதிக்க பாடி பில்டிங் உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்தான் ரூபி பியூட்டி. இளம் வயதில் அவருக்குப் பாடி பில்டிங் குறித்த ஆர்வமெல்லாம் கிடையாது. அது தற்செயலாகத்தான் அவரது மனதில் உதித்தது. அதற்கு கசப்பான காரணமும் உள்ளது.
மனம் முழுவதும் கனவுகள்
எல்லோருக்கும் கிடைத்தது போலத்தான் இவருக்கும் கனவுகள் நிரம்பிய மனது உண்டு. இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால் தனது வாழ்க்கையில் வரும் ஆண் தனக்கும் ஒரு தந்தையாக இருக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர் ரூபி. ஆனால் அவருக்கு வாய்த்தவரோ, தந்தையாக இருக்கவில்லை. அதை விட கொடுமையாக நல்ல கணவராக கூட இருக்கவில்லை. மாறாக சாடிஸ்ட்டாக வந்து விட்டார் அவர்.
போகப் போக கசந்த உறவு
ஆரம்பத்தில் அவருக்கு ரூபி இனித்தார். ஆனால் போகப் போக கசக்க ஆரம்பித்து விட்டார். வார்த்தைகளால் அவரைக் கொன்றார். தனது உடல் பருமனைக் காரணம் காட்டி கணவர் கிண்டலடித்து இழிவுபடுத்தியதால் ஜிம்முக்குப் போனார். உடல் பருமனைக் குறைத்தார். ஆனால் அதிலும் குறை கண்டார் கணவர். ஜிம் மாஸ்டருடன் மனைவியை இணைத்து வைத்துப் பேச ஆரம்பித்தார். கொந்தளித்துப் போன ரூபி.. கணவரை விட்டுப் பிரிய முடிவு செய்தார். விவாகரத்தானது.
மனதில் உறுதி வேண்டும்
விவாகரத்தான பின்னர் தனது மகனுக்காக வாழ ஆரம்பித்தார் ரூபி. தீவிரப் பயிற்சி மேற்கொண்டு பாடி பில்டரானார். இன்று சென்னையின் மிகச் சிறந்த பெண் பாடி பில்டர்களில் ரூபியும் ஒருவர். இந்த இடத்தை அடைய அவர் நிறைய அவமானத்தையும், சிரமத்தையும் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் அவர் விடவில்லை. இயல்பிலேயே அவருக்குள் இருந்த போர்க்குணம் அவரை ஒரு சிறந்த பாடி பில்டராக மாற்றியுள்ளது. இதற்காக அவர் பெருமைப்படுகிறார்.
முஷ்டி தட்டி சொல்கிறார் ரூபி
தேசிய பாடிபில்டிங் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தன்னுடைய பிறப்புக்கான அர்த்தத்தை உணர்ந்துள்ளார், உரியவர்களுக்கு உணர்த்தியுள்ளார். இதை விட பெரிய இடங்களுக்கு உயர வேண்டும் என்பதே அவரது இலட்சியமாக உள்ளது. விரைவில் சர்வதேச அரங்கில் தான் சாதனை புரிய காத்திருப்பதாகவும் பெருமையுடனும், உற்சாகத்துடனும் முஷ்டி உயர்த்தி மார் தட்டிச் சொல்கிறார் ரூபி பியூட்டி.. அசத்துங்க மேடம்.