சண்டிகர்: ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்குக்கு இந்த வருஷத்துக்குள் திருமணம் நடைபெறவுள்ளதாம்.
அவர் திருமணம் செய்யவிருப்பவரும் ஒரு மல்யுத்த வீரர்தானாம். ஆனால் தான் மணக்கப் போகும் மல்யுத்த வீரர் யார் என்ற விவரத்தை மட்டும் சாக்ஷி இதுவரை தெரிவிக்கவில்லை.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தவர் சாக்ஷி மாலிக். வெண்கலப் பதக்கம் வென்று இந்தியர்களைக் குளிர்வித்தார் சாக்ஷி. இவரைத் தொடர்ந்து பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பிவி. சிந்து.
ரியோவில் தான் வெண்கலம் வென்றாலும் கூட தனது இதயத்தை வேறு ஒருவர் ஏற்கனவே திருடி விட்டதாக கூறியுள்ளார் சாக்ஷி மாலிக். இதுகுறித்து அவர் ஆனந்தபஜார் பத்ரிகா பெங்காலி பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், எனக்கு இந்த வருடம் திருமணப் போகிறது. யார் எனது வருங்கால கணவர் என்பதை இப்போது சொல்ல மாட்டேன். அது ரகசியம். ஆனால் அவரும் ஒரு மல்யுத்த வீரர்தான் என்று வெட்கப் புன்னகையுடன் கூறியுள்ளார் சாக்ஷி.
மேலும் அவர் கூறுகையில் திருமணத்திற்குப் பிறகும் கூட நான் தொடர்ந்து மல்யுத்தம் செய்து வருவேன். அதில் எந்தத் தடையும் இருக்காது. அவர் எனக்கு மிகவும் ஆதரவாக, உறுதுணையாக இருக்கிறார். எனது கணவை தனது கனவாக கருதுகிறார்.
திருமணத்திற்குப் பிறகு எனக்கு நல்ல துணையாக, நல்ல நண்பராக அவர் இருப்பார். எனது கணவுகள் நினைவேற உறுதுணையாக இருப்பார். ஆதரவாக இருப்பார். என்னைத் தயார்படுத்த உதவுவார். திருமணத்திற்குப் பிறகும் நான் தொடர்ந்து மல்யுத்தத்தில் ஈடுபடுவதில், எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று கூறியுள்ளார் சாக்ஷி.
இந்திய மல்யுத்த வீராங்கனை ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றது இதுவே முதல் முறை என்பதால் அந்த வகையில் சாக்ஷி ஒரு சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.