ரோத்தக்: கடந்த ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்த சாக்ஷி மாலிக்கிற்கும், மல்யுத்த வீரர் சத்தியவர்த் கடியானுக்கும் திருமணம் நடைபெற்றது.
பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் கடந்த 2016-இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகள் பதக்கங்களை வென்று குவித்து வந்தன. அச்சமயம் இந்தியாவுக்கு இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் கிடைக்காதா என்று ஏங்கியிருந்த நேரத்தில் மல்யுத்தத்தில் பெண்கள் பிரிவில் வெண்கலத்தை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் வீர மங்கை சாக்ஷி மாலிக்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவருக்கும், மல்யுத்த வீரர் சத்தியவர்த்துக்கும் கடந்த அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சத்தியவர்த், 2010-ம் ஆண்டு நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவர் ஆவார்.
இந்நிலையில் இவர்களின் திருமணம் ஞாயிற்றுக்கிழமை சாக்ஷி மாலிக்கின் சொந்த மாநிலமான ஹரியானாவின் ரோத்தக் நகரில் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மல்யுத்த வீரர் சுஷில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.