தடுமாறிய இந்தியா
இன்று காலை நடந்த பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சண்டேலா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற தவறினார்கள். இதைத் தொடர்ந்து, நடந்த வில்வித்தை போட்டி கலப்பு அணிகள் பிரிவு வெளியேற்றுதல் சுற்றில், இந்தியாவின் பிரவீன் ஜாதவ் - தீபிகா குமாரி இணை காலிறுதிக்கு முன்னேறியது. இதில், 5-3 என்ற கணக்கில் சீன-தைபே அணியை வென்று இந்தியா காலிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து, இந்தியா - நியூசிலாந்து ஆண்கள் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில், 3-2 என்று கோல் கணக்கில் இந்தியா அபாரமாக வெற்றிப் பெற்றது.
ஏமாற்றம்
அதேசமயம், இன்று நடைபெற்ற ஜுடோ போட்டியில் இந்தியாவின் சார்பில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில், சுஷிலா தேவி - ஹங்கேரியின் எவா செர்னோ விக்கி ஆகியோர் மோதினர். இந்தியா சார்பில் ஜுடோ விளையாட்டில் கலந்து கொண்ட ஒரே போட்டியாளர் சுஷிலா மட்டும் தான். ஆனால், எவாவிடம் அவர் தோற்று வெளியேறினார். இதைத் தொடர்ந்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டில், கலப்பு இரட்டையர் பிரிவில் மனிகா பத்ரா- சரத்கமல் ஆகியோர் பங்கேற்றனர். சீன தைபேயின் லின் யன் ஜூ-செங்கு ஜிங்குவுடன் இவர்கள் மோதினர். இதில், 8-11, 6-11, 5-11, 4-11 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறியது இந்திய இணை.
சவுரப் நம்பிக்கை
இந்த நிலையில், Men's 10m Air Pistol தகுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில், உலகின் நம்பர்.1 வீரரான அபிஷேக் வெர்மா மற்றும் உலகின் நம்பர்.2 வீரரான சவுரப் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர். இதில், அபிஷேக் மொத்தமாகவே 575 புள்ளிகள் மற்றும் பெற்றதால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஆனால், இரண்டாம் நிலை வீரரான சவுரப் சவுத்ரி சிறப்பான ஷாட்களை வெளிப்படுத்தினார். இதனால் மொத்தமாக 586 புள்ளிகளை எடுத்து சவுரப் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
7வது இடம்
இதனால், இந்த இறுதிப் போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், இறுதிப் போட்டியில் அவர் 137.4 புள்ளிகள் மட்டும் பெற்று, ஏழாவது இடத்தையே பிடித்தார். நிச்சயம் ஏதாவது ஒரு மெடல் வென்றுவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் 7வது இடத்தைப் பிடித்து வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்ற மகிழ்ச்சியை கொண்டாடும் அதே வேளையில், இந்த பெரும் தோல்வியின் வேதனையும் ரசிகர்களை ஆட்கொண்டுள்ளது.