சிட்னி: ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் மரணமடைய காரணமாக இருந்த பவுன்சர் பந்தை வீசிய சீன் அப்பாட்டுக்கு உள்ளூர் அணியில் மீண்டும் விளையாட இடம் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெபீல்டு ஷீல்டு போட்டியில், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதும் 4 நாள் ஆட்டம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வந்தது. தெற்கு ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்திருந்த நிலையில் நியூ சவுத் வேல்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்பாட் வீசிய அதிவேக பவுன்சர் பந்து, பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் (25 வயது) தலையில் பலமாகத் தாக்கியது. ஹெல்மெட் அணிந்திருந்தாலும், படுகாயம் அடைந்த ஹியூஸ் களத்திலேயே சுருண்டு விழுந்தார். சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வாரம் அவர் இறந்தார்.
இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ் அணி நாளை குயின்ஸ்லேன்ட் அணியுடன், ஷெபீல்டு ஷீல்டு தொடரின் லீக் போட்டியொன்றில் ஆட உள்ளது. இந்த போட்டியில் ஆட மீண்டும் சீன் அப்பாட்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் இரு வாரங்களுக்கு பிறகு பந்து வீச உள்ளார். பிலிப் ஹியூக்ஸ் மரணத்தால் அதிர்ச்சியடைந்திருந்த அப்பாட்டுக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டது.
பல நாட்டு முன்னணி வீரர்களும் சீன் அப்பாட்டுக்கு ஆறுதல் கூறினர். இதனால் மனம் தேறியுள்ள அப்பாட் நாளைய போட்டியில் உத்வேகத்துடன் களமிறங்க உள்ளார். ஆஸ்திரேலிய உள்ளூர் அணியின் இந்த முடிவுக்கு முன்னணி வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.