87.58 மீட்டர் தூரம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதலின் இறுதிப் போட்டி நேற்று (ஆக.7) நடைபெற்றது. இதில் மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்றனர். இந்த இறுதிப் போட்டி மொத்தம் 6 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், தனது முதல் சுற்றிலேயே 87. 03 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி அதகளம் புரிந்தார் நீரஜ் சோப்ரா. அடுத்து 2வது சுற்றில் 87.58 மீ தூரம் வீசி ஒட்டுமொத்த எதிரணி போட்டியாளர்களை கலங்க வைத்தார். Czech Republic-ன் Jakub Vadlejch 86.67 மீட்டர் தூரம் வீசினார். மற்றொரு Czech Republic வீரர் வெஸ்லே 85.44 மீட்டர் தூரம் வீசினார். இதனால் முதல் 2 சுற்றுகளில் டாப் இடத்தில் நீரஜ் தான் இருந்தார். இதன் பின்னர் நடைபெற்ற 3,4, 5வது சுற்றுகளில் நீரஜ் சோப்ராவுக்கு ஃபௌல்களே மிஞ்சியது. எனினும் சோப்ராவாவின் 87.58 மீட்டர் என்ற தூரத்தை எந்த ஒரு வீரராலும் முறியடிக்க முடியவில்லை. இதனால் இறுதியில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னர் பி.வி.சிந்து, மீராபாய் சானு, ரவிக்குமார் தஹியா உள்ளிட்டோர் 6 பதக்கங்களை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தனர்.
1920 முதல்
அதுமட்டுமின்றி, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக புதிய சரித்திரம் படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் தனி நபர் ஆட்டத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் 2வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெறுகிறார். இதற்கு முன்னர் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக் தொடரில் இந்தியா கடந்த 1920ம் ஆண்டு முதல் பங்கேற்று வருகிறது. பல்வேறு போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை வென்று வந்தாலும், தடகளப்போட்டியில் மட்டும் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை. இந்நிலையில் பதக்கத்திற்காக 100 ஆண்டுகளாக காத்திருந்த இந்தியாவின் ஏக்கத்தை இன்று நீரஜ் சோப்ரா போக்கியுள்ளார்.
எதையும் யோசிக்கவில்லை
இந்நிலையில், தனது வெற்றிக்கான காரணம் குறித்து நீரஜ் சோப்ரா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார் அதில், "ஒலிம்பிக்கில் எந்த ஒரு ஆட்டமும் ஒரு நாள் நிகழ்வு அல்ல என்று நான் உணர்வேன். பல வருட கடின பயிற்சி மற்றும் பலரின் ஆதரவு இந்த சாதனையை அடைய எனக்கு உதவியது. தடகளத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கிலும் நாங்கள் எந்த தங்கப் பதக்கத்தையும் வெல்லவில்லை என்பதால், நான் தங்கம் வெல்ல வேண்டும் என்ற உணர்வு இருந்தது. ஆனால் நான் களத்தில் இருக்கும்போது, நான் இந்த விஷயங்களைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை, மாறாக த்ரோ வீசுவதில் தான் கவனம் செலுத்தினேன். இதனால் தான் நான் அழுத்தத்தை உணரவில்லை:
மெடல் ஜெயித்தேன்
அதாவது, போட்டியின் போது பதக்கங்கள் குறித்தோ, தங்கம் வெல்வது குறித்தோ, வெற்றிப் பெற வேண்டிய கட்டாயம் குறித்தோ நான் சிந்திக்கவில்லை. எனது த்ரோவை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தேன். இதனால், மனதில் எந்தவித அழுத்தமும் இன்றி என்னுடைய இலக்கை எட்ட முயற்சி செய்தேன். மெடல் கிடைத்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.