நாடு முழுவதும் 56 மையங்கள்
இந்திய விளையாட்டு ஆணையம் சுருக்கமாக சாய் என்று அழைக்கப்படும் இந்த ஆணையம் இந்தியாவின் விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களையும் விளையாட்டு வீரர்களையும் உருவாக்கும் பணியை செய்து வருகிறது. நாடு முழுவதும் இதன்கீழ் 56 பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 15,000 வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
பரிதவிப்பில் விளையாட்டு வீரர்கள்
இந்த சாய் அமைப்பில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதாகவும், வீரர்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதி அவர்களை சென்று சேர்வதில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து தெரிவிக்கப்படுகின்றன. இதனால் ஏழை விளையாட்டு வீரர்கள் பரிதவித்து வருகின்றனர்.
பாலியல் குற்றச்சாட்டுகள்
இந்நிலையில் சாய் அமைப்பு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில் சாய் கீழ் செயல்பட்டுவரும் 24 மையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 45 பாலியல் குற்றச்சாட்டுகளில் 29 குற்றச்சாட்டுகள் பயிற்சியாளர்கள் குறித்தது என்று தெரியவந்துள்ளது.
பல்வேறு விளையாட்டுகளில் புகார்
கடந்த பத்தாண்டுகளில் பெறப்பட்டுள்ள இந்த 29 குற்றச்சாட்டுகளில் ஜிம்னாஸ்டிக்ஸ், தடகளம், பளுதூக்குதல், பாக்சிங், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளை சேர்ந்த பயிற்சியாளர்கள் குறித்த புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.
முன்னாள் சாய் தலைவர் திட்டவட்டம்
இந்நிலையில் வெளிவராத புகார்கள் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள சாய் அமைப்பின் முன்னாள் தலைவர் நீலம் கபூர், அதனால் தற்போது பெறப்பட்டுள்ள எண்ணிக்கையை விட உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள் பதிவிடாத நிலை
பயிற்சியாளரின் பாலியல் சீண்டல்கள் குறித்து புகார் தெரிவித்தால், தான் அந்த விளையாட்டில் தேர்வாக மாட்டோம் என்ற பயத்தில் அதிகமான வீராங்கனைகள் குற்றச்சாட்டை பதிவிடாத நிலை காணப்படுவதாகவும் நீலம் கபூர் தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
இத்தகைய புகார்களை யாரிடம் கூற வேண்டும் என்ற அடிப்படை புரிதல்கூட இல்லாத நிலையில் வீரர்கள் காணப்படுவதாக வேதனை தெரிவித்த நீலம் கபூர், அவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீலம் கபூர் வேதனை
பயிற்சியாளர்களின் இத்தகைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக அவர்களது சம்பளம் அல்லது ஓய்வூதியத்தில் மிகக்குறைந்த தொகையை கழிப்பது, வேறு இடத்திற்கு மாற்றுவது என்பதுபோன்ற தண்டனைகளே கிடைப்பதாகவும் நீலம் கூறியுள்ளார்.
கால தாமதமாகும் விசாரணை
அச்சத்தின் காரணமாக பலர் புகார் தெரிவிக்காத நிலையில், புகாரை பதிவு செய்தாலும் அந்த வழக்குகள் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படுவதாகவும் இதுபோல பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் நீலம் மேலும் தெரிவித்தார்.
நீலம் கபூர் கோரிக்கை
சாய் பயிற்சி மையத்தின்கீழ் வீரர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கூறிய நீலம் கபூர், ஆனால் வீரர்களின் குறிப்பாக வீராங்கனைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பது முக்கியம் என்று நீலம் கபூர் கோரிக்கை விடுத்துள்ளார்.