தங்கப் பதக்கம்
இன்று காலை முதல் இந்திய அணி மாறி மாறி வெற்றி தோல்விகளை சந்தித்து வருகிறது. பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சண்டேலா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான முதல் 8 இடங்களுக்குள் இடம் பெற தவறினார்கள். இந்த துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தான் சீனா தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
ஹாக்கியில் அபாரம்
இதைத் தொடர்ந்து, நடந்த வில்வித்தை போட்டி கலப்பு அணிகள் பிரிவு வெளியேற்றுதல் சுற்றில், இந்தியாவின் பிரவீன் ஜாதவ் - தீபிகா குமாரி இணை காலிறுதிக்கு முன்னேறியது. இதில், 5-3 என்ற கணக்கில் சீன-தைபே அணியை வென்று இந்தியா காலிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து, இந்தியா - நியூசிலாந்து ஆண்கள் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில், 3-2 என்று கோல் கணக்கில் இந்தியா அபாரமாக வெற்றிப் பெற்றது.
சுஷிலா தோல்வி
அதேசமயம், இன்று நடைபெற்ற ஜுடோ போட்டியில் இந்தியாவின் சார்பில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில், சுஷிலா தேவி - ஹங்கேரியின் எவா செர்னோ விக்கி ஆகியோர் மோதினர். இந்தியா சார்பில் ஜுடோ விளையாட்டில் கலந்து கொண்ட ஒரே போட்டியாளர் சுஷிலா மட்டும் தான். ஆனால், எவாவிடம் அவர் தோற்று வெளியேறினார்.
சறுக்கிய சரத் - மனிகா ஜோடி
இதைத் தொடர்ந்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய அணி களமிறங்கியது. இந்தியா மெடல் வெல்லும் என்று ஸ்ட்ராங்காக கணிக்கப்பட்ட மற்றொரு விளையாட்டு டேபிள் டென்னிஸும் ஒன்று. இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் மனிகா பத்ரா- சரத்கமல் ஆகியோர் பங்கேற்றனர். சீன தைபேயின் லின் யன் ஜூ-செங்கு ஜிங்குவுடன் இவர்கள் மோதினர். இதில், 8-11, 6-11, 5-11, 4-11 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறியது இந்திய இணை. இந்த போட்டியில், பெரிய அளவில் இந்திய அணியால் சவால் அளிக்கவே முடியவில்லை என்பது சோகமான விஷயமாகும். இதைத்தொடர்ந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா - இங்கிலாந்தின் ஹோ டின்னுடன் இன்று மோதுகிறார். மற்றொரு போட்டியில் சுதிர்தா முகர்ஜி - சுவீடனின் லின்டா பெர்ஜிஸ்டிரோமுடன் மோதுகிறார்.