சென்னை: ஆசிய விளையாட்டு போட்டியில் ஓட்டப் பந்தையத்தில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த சாந்தி சவுந்தர்ராஜன் தற்போது வாழ்க்கை நடத்த ஒரு அரசு வேலையின்றி தவித்து வருகிறார்.
இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர பிற விளையாட்டு துறையில் சாதித்த பிரபலங்களை பலருக்கும் தெரிவதில்லை. அவர்கள் படும் கஷ்ட நஷ்டங்களும் வெளியே வருவதில்லை. அப்படித்தான் கவனிப்பாரற்று தவித்து வருகிறார் தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன்.
2006ம் ஆண்டு தோகாவில் நடைபெற்ற, ஆசிய விளையாட்டு போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் சாந்தி வெள்ளி பதக்கம் வென்றார். அந்த மகிழ்ச்சியில் ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சி கூத்தாடிய நேரத்தில்தான் இடிபோல இறங்கியது அந்த தகவல்.
சாந்தி பெண்மை தன்மை இல்லாதவர், ஆண் தன்மை கொண்டவர் என்று கூறிய சர்வதேச தடகள சம்மேளனம், அவரது பதக்கத்தை பறித்தது. பதக்கம் போனது வேறு, பழி வேறு என்று இருபெரும் தாக்குதலில் சிக்கி திணறிப்போனார் சாந்தி. இத்தனைக்கும், சாந்திக்கு எதிராக நடத்தப்பட்ட சதிதான் இந்த பதக்க பறிப்பு என்று கூறிய ஆர்வலர்கள் சாந்திக்கு முழு அளவில் ஆதரவு தெரிவித்தனர்.
ஆனாலும், அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் இருந்து அவருக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலையில், அரசு வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார் சாந்தி. தற்போது, மைலாடுதுறையில், இந்திய விளையாட்டு ஆணையத்தில், ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்க்கிறார். மாதம் 23 ஆயிரம் ரூபாய் சம்பளம். கிராமத்திலுள்ள அவரது பெற்றோரையும், சேர்த்து இந்த சொற்ப வருமானத்தை கொண்டுதான் காப்பாற்றி வருகிறார் சாந்தி.
ஆனால், இந்த ஒப்பந்தமும் இன்னும் 4 மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில் அதன்பிறகு, அவரது எதிர்காலம் இருளாகவே கண்களுக்கு தெரிகிறது.
நிரந்தர வேலைகேட்டும், ஆசிய விளையாட்டு போட்டிக்காக மத்திய அரசு அறிவித்த நிதி உதவியை கேட்டும், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்கு, சாந்தி எழுதிய கடிதத்துக்கு, நெகட்டிவ் ரிப்ளே அனுப்பியுள்ளது அமைச்சகம்.
அந்த பதிலில், "உங்களது பதக்கம், மீண்டும் உங்களுக்கு திரும்ப அளிக்கப்படாத நிலையில், ரொகக்க பரிசை உங்களுக்கு வழங்க முடியாத நிலையில் உள்ளோம். மேலும், மத்திய விளையாட்டு அமைச்சகம், எந்த ஒரு குறிப்பிட்ட விளையாட்டு வீரருக்கும், வேலை அளிக்க சிபாரிசு செய்வதும் கிடையாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 2006 விளையாட்டு போட்டி சர்ச்சை காரணமாக, 2005ல் தென்கொரியாவில் நடைபெற்ற, ஆசிய தடகள போட்டியில் சர்ச்சையே இன்றி சாந்தி பெற்ற வெள்ளி பதக்கத்தையும் யாரும் மதிப்பதாக இல்லை, அதற்காகவாவது வேலை தரவும் இல்லை.
கிராமப்புற சூழலில் இருந்து, வசதி குறைந்த பின்புலத்தை வைத்துக் கொண்டு கடின உழைப்பால் முன்னேறி நாட்டுக்கு பெருமை சேர்த்த சாந்தியின் வாழ்க்கையில் மத்திய, மாநில அரசுகள் விளக்கேற்றுமா..??