தொடக்க விழா
உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் வழக்கமாக மிகவும் பிரம்மாண்ட முறையில் தொடங்கும். ஆனால் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் போட்டிகள் தொடங்குவதால், நாளை நடைபெறவிருக்கும் தொடக்க நிகழ்ச்சிகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தொடக்க நிகழ்ச்சி மிக மிக எளிமையான முறையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியர்களின் பங்கேற்பு
இந்நிலையில் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இந்திய அணியின் சார்பில் 22 வீரர்கள், 6 அதிகாரிகள் மட்டுமே கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிகிறது. குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மண்பிரீத் சிங் ஆகியோர் இந்தியாவின் கொடியை ஏந்தி செல்லவுள்ளனர். இந்தியா சார்பில் மொத்தமாக 228 பேர் டோக்கியோவுக்கு சென்றுள்ள சூழலில் இவ்வளவு குறைவான நபர்களே தொடக்க விழாவில் இருப்பார்கள் என அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரணம்
இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் நரிந்தர் துருவ் பத்ரா, நாளை தொடங்கவுள்ள ஒலிம்பிக் தொடக்க விழா நாளை நள்ளிரவு வரை நடக்கலாம் என தெரிகிறது. ஆனால் போட்டியின் முதல் நாளான சனிக்கிழமை இந்தியாவை சேர்ந்த பல வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிகள் உள்ளன. எனவே நள்ளிரவு வரை தூக்கமின்றி இருந்தால், சனிக்கிழமை போட்டியில் சற்று சோர்வாக இருப்பார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளார்.
Recommended Video
வீரர்கள் பட்டியல்
தற்போது வெளியிட்டுள்ள பட்டியலின் படி, ஹாக்கி, ஜிம்னாஸ்டிக், நீச்சல், செய்லிங் ஆகிய போட்டிகள் சார்பில் தலா ஒருவர் கலந்துக்கொள்கின்றனர்.
குத்துச்சண்டை (8), டேபிள் டென்னிஸ் (4), ரோவிங் (2), ஃபென்சிங் (4) என மொத்தம் 22 பேர் கலந்துக்கொள்கின்றனர். இந்தியாவின் சார்பில் 6 அதிகாரிகள் கலந்துக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடன நிகழ்ச்சிகள்
ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் எப்போதும் கிட்டத்தட்ட 10,000 வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடியுடன் அணிவகுப்பு நடத்துவார்கள். இந்த முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை அவை பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் இந்திய அணியின் முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.