கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 6 வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதால் அவர்கள் இங்கிலாந்து போக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்குப் போயுள்ளது. அங்கு இங்கிலாந்துடன் கிரிக்கெட் போட்டிகளில் ஆடவுள்ளது. அணியில் ஒரு பிரிவினர் இங்கிலாந்து போயுள்ள நிலையில் கடந்த வாரம் 6 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது. இதையடுத்து பாசிட்டிவ் வந்த வீரர்கள் பகர் ஜமான், முகம்மது ஹஸ்னைன், முகம்மது ஹபீஸ், முகம்மது ரிஸ்வான், ஷதாப் கான், வஹாப் ரியாஸ் ஆகியோர் இங்கிலாந்து செல்லாமல் தங்கி விட்டனர்.
இவர்களுக்கு தற்போது கடந்த 3 நாட்களில் 2 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என முடிவு வந்தது. இதையடுத்து இவர்கள் 6 பேரும் இங்கிலாந்து செல்ல தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ஆறு பேரும் இங்கிலாந்து புறப்படவுள்ளனர்.
முன்னதாக ஹபீஸுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்த சோதனையின்போது பாசிட்டிவ் வந்தது. ஆனால் அவர் அடுத்த நாள் தனியார் மருத்துவமனையில் சோதனை செய்தபோது நெகட்டிவ் என வந்தது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த 3 நாட்களில் இந்த 6 வீரர்களுக்கும் 2 முறை சோதனை செய்தபோது நெகட்டிவ் என வந்துள்ளது.
அந்தப் போட்டி ஃபிக்ஸ் செய்யப்பட்டதா.. தோண்டி எடுக்கும் இலங்கை கிரிக்கெட்
மொத்தம் 10 பாகிஸ்தான் வீரர்களுக்கு பாசிட்டிவ் வந்தது. அதில் இந்த 6 பேருக்கும் நெகட்டிவ் என வந்ததால் அவர்கள் இங்கிலாந்து செல்லவுள்ளனர். பாகிஸ்தானின் 20 வீரர்கள் மற்றும் 11 ஊழியர்கள்கடந்த சனிக்கிழமை இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றனர். இரு அணிகளுக்கும் இடையே 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளது.