விலை பேசிட்டாங்களாம்
இதுதொடர்பாக விசாரிக்கப் போவதாக தற்போது அந்த நாட்டின் விளையாட்டுத்துறை செயலாளர் ருவன் சந்திரா என்பவர் கூறியுள்ளார். முன்னதாக அந்த நாட்டு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தநந்த அலுத்தகமே என்பவர் இந்தப் போட்டியில் இலங்கை அணியை விலை பேசி வாங்கி விட்டனர். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இலங்கையை விலைக்கு வாங்கி விட்டனர். இதுகுறித்து நான் நிறைய சொல்ல வேண்டியுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
விசாரணை தேவை
இந்த விவகாரத்தில் வீரர்களுக்குத் தொடர்பு கிடையாது. ஆனால் வேறு சிலருக்கு தொடர்பு உள்ளது என்று கூறியிருந்தார் அவர். இந்த விவகாரம் குறித்து 1996ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றவரான முன்னாள் கேப்டன் ரனதுங்காவும் கூட எனக்கும் இப்போட்டி குறித்து சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அரவிந்த டிசில்வாவிடம் விசாரணை
இதையடுத்தே தற்போது போலீஸ் விசாரணைக்கு இலங்கை விளையாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ருவன் சந்திரா கூறுகையில், காவல்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவு தலைவர் இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறார் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக முன்னாள் கேப்டனும், 2011 இறுதிப் போட்டிக்கான அணியைத் தேர்வு செய்தவருமான அரவிந்த டிசில்வாவிடம் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.
தோனி அசத்தல்
அந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணி ஆரம்பத்தில் சிறப்பாகவே பேட் செய்தது. முதலில் அது பேட் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களைக் குவித்தது. பின்னர் பவுலிங்கிலும் கூட அது சிறப்பாகவே செயல்பட்டது சச்சின் டெண்டுல்கர் அப்போட்டியில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பின்னர் போட்டி திசை மாறியது. இலங்கை பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் சொதப்ப ஆரம்பித்தது. தோனியும், யுவராஜ் சிங்கும் இணைந்து மிரட்டலான பேட்டிங்கைக் கொடுக்க இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.