டெல்லி: பிரீமியர் பாட்மின்டன் லீக் மூன்றாவது சீசனின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை ஸ்மாஷர்ஸ் தோல்வியடைந்தது. மும்பை ராக்கெட்ஸ் அணியுடன் நாளை நடக்கும் போட்டியில் வெற்றி கணக்கை துவக்குமா பி.வி. சிந்துவின் அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரீிமியர் பாட்மின்டன் லீக் மூன்றாவது சீசன் போட்டிகள் நடக்கின்றன. மொத்தம் எட்டு அணிகள், பங்கேற்கும் இந்தப் போட்டி, நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கிறது.
முதல் டையில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணியும், அவதே வாரியர்ஸ் அணியும் மோதின. காயம் காரணமாக அவதே வாரியர்ஸ் அணியின் சாய்னா நெஹ்வால் கடைசி நேரத்தில் விலகினார். அந்த போட்டியில் 4-3 என்ற கணக்கில் அவதே வாரியர்ஸ் அணி வென்றது.
அவதேயின் ஸ்ரீகாந்த், கஷ்யப் வென்றனர்
மாற்று இரட்டையர், ஆடவர் ஒற்றையரில் ஸ்ரீகாந்த், கஷ்யப் ஆகியோர் அவதே வாரியர்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். மகளிர் ஒற்றையரில் பி.வி. சிந்து, ஆடவர் இரட்டையரில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி வென்றது.
அடுத்ததாக இரண்டாவது டையில் ஐதராபாத் ஹன்டர்ஸ் 5-2 என்ற கணக்கில் நார்த் ஈஸ்டர்ன்ஸ் வாரியர்ஸ் அணியை வென்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை ராக்கெட்ஸ் 4-1 என்ற கணக்கில் டெல்லி டேஷர்ஸ் அணியை அடித்து தூள் கிளப்பியது.
இன்று நடக்கும் 4-வது டையில் அகமதாபாத் ஸ்மாஷ்மாஸ்டர்ஸ் அணியும் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.
வெற்றி கணக்கை துவக்குமா சென்னை
நாளை டெல்லியில் நடக்கும் ஆட்டத்தில் மும்பை ராக்கெட்ஸ் அணியை சென்னை ஸ்மாஷர்ஸ் அணி சந்திக்கிறது. தற்போதைய நிலையில் ஐதராபாத் ஹன்டர்ஸ் 5 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அவதே வாரியர்ஸ் மற்றும் மும்பை ராக்கெட்ஸ் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் 2-வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன. சென்னை ஸ்மாஷர்ஸ் 3 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.