214 பதக்கங்களுடன் இந்தியா முன்னிலை
காத்மாண்டு மற்றும் பொக்ராவில் நடைபெற்றுவரும் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் அபாரமாக விளையாடி வருகின்றனர். இந்தியா 214 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது.
3வது இடத்தை பிடித்த இலங்கை
பதக்கப்பட்டியலில் நேபாளம் 43 தங்கம், 34 வெள்ளி மற்றும் 65 வெண்கலம் என 142 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதேபோல 30 தங்கம், 57 வெள்ளி மற்றும் 83 வெண்கலம் என 170 பதக்கங்களுடன் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்திய வீரர்கள் சாதனை
நேற்று நடைபெற்ற 6வது நாள் போட்டிகளில் 29 தங்கம் உள்பட 49 பதக்கங்களை இந்தியா தன்வசமாக்கியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் போட்டியிடும் விரர்கள், தங்கத்தை நோக்கிய தங்களது நடையை துரிதமாக்கியுள்ளனர்.
பளு தூக்குதலிலும் தங்கம்
நேற்று நடைபெற்ற போட்டிகளில் நீச்சல் போட்டிகள் மூலம் 7 தங்கப்பதக்கங்களையும் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்தையும் இந்திய வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கி சுடுதல் மற்றும் பளு தூக்குதலிலும் வீரர்கள் முறையே 3 மற்றும் 2 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.
110 தங்கப் பதக்கங்கள்
தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் தொடர்ந்து பதக்கங்களை கைப்பற்றி வரும் நிலையில், இதுவரை 110 தங்கம், 69 வெள்ளி மற்றும் 35 வெண்கலங்களை இந்தியா வென்றுள்ளது. இந்தப் போட்டிகளில் 23 தங்கத்துடன் பாகிஸ்தான் 4வது இடத்தில் உள்ளது.
10ம் தேதி நிறைவு பெறுகிறது
தெற்காசிய விளையாட்டு போட்டிகள் கடந்த 1ம் தேதி நேபாளம் தலைநகர் காத்மாண்டு மற்றும் பொக்ராவில் துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் 10ம் தேதி இந்த போட்டிகள் நிறைவு பெறவுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன.