சுமத்ரா: சுனாமியில் பெற்றோரை இழந்த சிறுவன் ஒருவன் மனம் தளராமல் தன்னுடைய ஆதர்ச கால்பந்து வீரரான ரொனால்டோ போலவே கால்பந்து வீரராக மாறியுள்ளார்.
டிசம்பர் 26, 2004, சுமார் 2.5 லட்சம் மக்களை பலி வாங்கிய சுனாமியில் தன் அம்மாவும் அக்காவும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட போது, சிறுவனான மார்டுனிஸ் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
சுனாமியால் அனைத்தையும் இழந்த அவன் தண்ணீரையும், கடற்கரையோரம் ஒதுங்கிய பொருட்களையும் சாப்பிட்டு 21 நாட்கள் தாக்குப் பிடித்தான்.கடைசியில் ஒரு பத்திரிக்கையாளர் வந்து அவனை மீட்டார். அப்போது அவன் போர்ச்சுகல் அணியின் ஜெர்சியை அணிந்திருந்தான். அவனது புகைப்படம் இந்தோனேசியா முழுவதும் பிரபலமானது.
தன் குடும்பத்தை பார்க்கப் போகிறோம் என்று நினைத்திருந்த குட்டி மார்டுனிசுக்கு தன் குடும்பத்தில் யாருமே உயிரோடு இல்லை என்ற செய்தி இடியாக இறங்கியது. மார்டுனிஸ் பெற்றோரை இழந்து அனாதையாகி நிற்பதையும், அவனது கால்பந்து ஆசையையும் போர்ச்சுகல் கால்பந்து அணி தெரிந்து கொண்டது. இதையடுத்து மார்டுனிசின் கால்பந்து ஆசையை நிறைவேற்ற போர்ச்சுகல் கால்பந்து அணி முடிவு செய்தது.
அதிலும் முக்கியமாக போர்ச்சுகல் அணியின் தற்போதையை கேப்டனான ரொனால்டோ குட்டி மார்டுனிசின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்தார். இந்தோனேஷியாவில் அவனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரொனால்டோ பார்த்து பார்த்து செய்ய, வெறித்தனமாக கால்பந்து பயிற்சி மேற்கொண்டான் மார்டுனிஸ்.
இந்நிலையில், தற்போது வளர்ந்து கம்பீரமான இளைஞனாகியுள்ள மார்டுனிஸ் போர்ச்சுகல் நாட்டின் புகழ்பெற்ற ஸ்போர்ட்டிங் லிஸ்பன் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளான். 17 வயதே நிரம்பிய மார்டுனிசுக்கு நேற்று முன்தினம் ஸ்போர்ட்டிங் லிஸ்பன் அணியின் ஜெர்சி வழங்கப்பட்டது. அவன் அணியில் இடம்பெற்ற சந்தோஷமான செய்தி அணியின் 109 ஆண்டு விழாவான அன்று அறிவிக்கப்பட்டது.
இதே ஸ்போர்ட்டிங் லிஸ்பன் அணிக்காகதான் ரொனால்டோ முதல் முறையாக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.