அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், லண்டன் ஒலிம்பிக் போட்டி சாம்பியனான இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ஆகியோர் மோதினர்.
பரபரப்பு மிகுந்த போட்டியின் முதல் சுற்றில் ஆன்டி முர்ரே 7-6 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். அடுத்த செட்டையும் அவர் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். இந்த நிலையில் 3வது செட்டில் அதிரடியாக ஆடிய ஜோகோவிச் 6-2 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றினார். அடுத்த செட்டையும் 6-3 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்ற, போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு அதிகரித்தது.
ஆனால் 5வது செட்டில் சிறப்பாக ஆடிய ஆன்டி முர்ரே 6-2 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றி, போட்டியில் வெற்றி பெற்றார். 4 மணி 54 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில் ஆன்டி முர்ரே 7-6, 7-5, 2-6, 3-6, 6-2 என்ற செட்களில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதன்மூலம் கடந்த 76 ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஆன்டி முர்ரே படைத்தார். இதற்கு முன்னதாக கடந்த 1936ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் பிரெட் பெர்ரி அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆன்டி முர்ரேவுக்கு ரூ.10.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும் டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசையில் ஆன்டி முர்ரே 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.