பெய்ஜிங்: இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க வேட்டை தோல்விகளுடன் தொடங்கியுள்ளது. துப்பாக்கிச் சுடுதல் மற்றும் ஜூடோவில் ஏமாற்றம் ஏற்பட்டாலும், வில் வித்தை வீரர்கள் நம்பிக்கையூட்டும் வகையில் களத்தில் உள்ளனர். சில பதக்கங்களை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் 56 வீரர், வீராங்கனைகளுடன் பெய்ஜிங் போயுள்ள இந்திய அணிக்கு முதல் நாளிலேயே மோசமான தோல்விகள் காத்திருந்தன. முதல் போட்டியாக துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா களம் கண்டது.10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் தகுதிப் போட்டியில், அஞ்சலி பகவத்தும், அவ்நீத் கெளர் சித்துவும் பதக்கத்தைக் குறி வைத்து இறங்கினர். ஆனால் இருவருமே தகுதிச் சுற்று அளவிலேயே தோல்வியுற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறினர். அஞ்சலி 29வது இடத்தையும், அவ்நீத் 39வது இடத்தையும் பிடித்து இந்தியாவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அஞ்சலி 400க்கு 393 என்ற கணக்கிலும், அவ்நீத் 400க்கு 389 என்ற கணக்கிலும் சுட்டனர். டோம்பி தேவி மெகா தோல்வி! மகளிருக்கான 48 கிலோ பிரிவு ஜூடோ போட்டியில், இந்தியாவின் குமுஜம் டோம்பி தேவி தோல்வியுற்றார். முதல் சுற்றுப் போட்டியிலேயே அவர் மகா மோசமான முறையில், தோல்வியைத் தழுவினார். போர்ச்சுகல் வீராங்கனை அனா ஹோர்மிகோவுடன் மோதிய டோம்பி தேவி, 2 நிமிடம் அரை விநாடிகளிலேயே பரிதாபகரமாக தோல்வியுற்றார். இவர் ஐரோப்பிய ஜூடோ கழக சாம்பியன் போட்டியில் தங்கம் வென்றிருந்ததால், ஒலிம்பிக்கிலும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டே நிமிடங்களில் அவர் தோல்வியைத் தழுவியது இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இன்னொரு வீராங்கனையான திவ்யா தேவார், 78 கிலோ பிரிவில் மோதவுள்ளார். ஊசலாட்டத்தில் மான்ஷெர் - மனவ்ஜித் ஆடவர் டிராப் பிரிவில் மனவ்ஜித் சந்துவும், மான்ஷெர் சிங்கும் ஊசலாட்ட நிலையில் உள்ளனர். உலக சாம்பியனான மனவ்ஜித் சந்து 75க்கு 70 என்ற புள்ளிக் கணக்கில் 12வது இடத்தில் உள்ளார். நான்காவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள மான்ஷெர் சிங் 69 புள்ளிகளுடன் 29வது இடத்தில் இருக்கிறார். தகுதிச் சுற்றின் (மொத்தம் 25 ரவுண்டு) 2 சுற்றுக்களில் அவர் குறி தவறினார். 2வது சுற்றில் (மொத்தம் 25) மீண்டும் இரண்டு முறை குறி தவறினார். 3வது சுற்றில் (25) சற்று மேம்பட்டு ஒரு முறை குறி தவறினார். நாளை மேலும் இரண்டு சுற்றுக்களில் (தலா 25 ரவுண்டு) இரு வீரர்களும் பங்கேற்கவுள்ளனர். அதில் சிறப்பாக செய்தால்தான் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரிவில் மொத்தம் 35 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் 8 பேர்தான் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும். மோசமாக சுட்ட சம்ரேஷ் ஜங் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சம்ரேஷ் ஜங் கடைசி இடத்திற்கு முதலிடத்தைப் பிடித்து தோல்வியுற்றார். 2006ம் ஆண்டு நடந்த மெல்போர்ன் காமன்வெல்த் போட்டிகளின் நாயகனாக திகழ்ந்த ஜங், இம்முறை மகா மோசமாக சுட்டார். மொத்தம் உள்ள 43 வீரர்களில், 42வது வீரராக வந்து தோல்வியுற்றார். இப்பிரிவில் முதல் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள், இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். வில் வித்தையில் அசத்தல் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றம் இருந்தாலும் வில் வித்தையில் பெரும் நம்பிக்கை பிறந்துள்ளது. இந்திய வீரர் மங்கள் சிங் சம்பியா, தகுதிச் சுற்றில் 2வது இடத்தைப் பிடித்து இந்தியாவின் பதக்க நம்பிக்கைக்கு உயிரூட்டியுள்ளார். மொத்தம் 678 புள்ளிகளை அவர் பெற்றார். முதலிடத்ைதப் பிடித்தவதர் ஜூவான் ரெனே செர்ரனோ. இவர் சம்பியாவை விட ஒரு புள்ளி மட்டுமே அதிகம் பெற்றுள்ளார். இதன் மூலம் சம்பியாவுக்கு பதக்கம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கொஞ்சம் கஷ்டப்பட்டால் அவருக்கு தங்கம் கிடைக்கலாம். இல்லாவிட்டால் நிச்சயம் வெள்ளி கிடைப்பது உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், மகளிர் குழு பிரிவில் டோலா பானர்ஜி, போம்பயலா தேவி, பரினிதா ஆகியோர் மொத்தமாக 1897 புள்ளிகள் பெற்று 6வது இடத்தைப் பெற்றனர். இந்த குழு அடுத்துகாலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதில் சீனாவை இந்தியா வெல்ல வேண்டும். அப்படி வென்றால் அரை இறுதிக்குத் தகுதி பெற முடியும். அப்படி முன்னேறினால் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்பு இந்திய மகளிர் அணி சீனாவுடன் 3 முறை மோதி , மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளது. எனவே அரை இறுதிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக டோலா பானர்ஜி நம்பிக்ைக தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சுடுதல், ஜூடோவில் இந்தியர்கள் ஏமாற்றினாலும், வில் வித்தையில் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது இந்தியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.