டேவிஸ் கோப்பை போட்டிகளை புறக்கணிப்பதாக இந்தியாவின் மூத்த வீரர்களான சோம்தேவ் தேவ்வர்மன், மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா உள்ளிட்ட 11 பேர் அறிவித்திருந்தனர். இதனால் இளம் வீரர்களுடன் டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா களம் இறங்கியது.
முதல் நாளில் அறிமுகமான இந்திய வீரர்கள் வி.எம்.ரஞ்சித், விஜயந்த் மாலிக் ஆகியோர் தென்கொரியா வீரர்களிடம் சரணடைந்தனர்.
தென்கொரியாவின் மின் ஹயோக் ஹோவை ரஞ்சித் எதிர்கொண்டார். ஆனால் மின் ஹயோக் 6-1, 6-0, 6-1 என்ற நேர் செட்டில் ரஞ்சித்தை எளிதாக தோற்கடித்தார்.
மற்றொரு இந்திய வீரரான விஜயந்த் மாலிக், மற்றொரு தென்கொரியாவின் முதல்நிலை வீரர் சுக் யங்க் ஜியோங்குடன் மோதினார். 4-6, 5-7, 0-3 என்ற கணக்கில் விளையாடிக் கொண்டிருந்த அவர் இடது கால் தசைப்பிடிப்பால் விலகினார். இதனால் ஜியோங் வெற்றி பெற்றார்.
இன்று இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்-புராவ் ராஜா ஜோடி தென்கொரியாவின் யோங் யு லிம்-ஜி சங் நாம் ஜோடியை எதிர்கொள்கிறது.