பிரபீர் முகர்ஜி படு ஸ்டிரிக்ட்டானவர். டோணியே வந்து மிரட்டினாலும் கூட இவரிடம் போணியாகாது என்பதை சமீபத்தில் நிரூபித்தவர். எனக்குச் சாதகமாக பிட்ச் போட்டுக் கொடுங்க என்று டோணி கோரியபோது அதை கடுமையாக எதிர்த்து நிராகரித்தவர். 83 வயதான பிரபீர் முகர்ஜியின் கடுமையான நிலைப்பாட்டால் டோணி பெரும் அப்செட்டானார். இதையடுத்து டோணியை சமாதானப்படுத்த பிரபீரை மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதைக் கேட்டு கொந்தளித்து விட்டார் பிரபீர். இதனால் அவரை இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட்டது கிரிக்கெட் வாரியம்.
இந்த நிலையில் பிரபீரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் ஆதர்டன். இவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன். தற்போது டிவி வர்னணையாளராக வந்திருக்கிறார். இவர் ஈடன் கார்டன் மைதானத்திற்கு வந்து பிட்ச் எப்படிப் போட்டுள்ளனர் என்று பார்க்க முற்பட்டார். பிட்சுக்கு அருகில் வந்து இப்படி ஆய்வு செய்வது விதிமுறைகளுக்குப் புறம்பானது.
இந்த நிலையில் ஆதர்டன் வந்து பிட்ச்சை வேடிக்கைப் பார்த்ததைப் பார்த்து விட்டார் அங்கேயே கழுகுக் கண்களுடன் சுற்றிக் கொண்டிருந்த பிரபீர். அவ்வளவுதான், படு கோபமாக கைகளை ஆதர்டனை நோக்கிக் காட்டி, இங்கிருந்து வெளியேறுங்கள் என்று படு வேகமாக ஆட்டியபடி முறைத்தார். அதைப் பார்த்து பயந்து போன ஆதர்டன் வேகமாக அங்கிருந்து நகர்ந்து போய் விட்டாராம்.
இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந் சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரபீரின் செயலில் தவறில்லை என்று பெங்கால் கிரிக்கெட் கிளப் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் கிளப்பின் இணைச் செயலாளர் சுபீர் கங்குலி கூறுகையில், ஒரு கிரிக்கெட் வர்னணையாளர் எப்படி பிட்ச்சை வந்து ஆய்வு செய்யலாம். போட்டிக்கு சற்று நேரத்திற்கு முன்புதான் அதற்கு அனுமதி உண்டு. எனவே பிரபீர் முகர்ஜி, ஆதர்டனை விரட்டியதில் தவறே இல்லை என்று கூறினார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது என்பது நினைவிருக்கலாம்.