ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கால் கிரிக்கெட் உலகம் பரபரப்பாக உள்ளது. இதன் விசாரணைப் போக்கு, தண்டனை உள்ளிட்டவை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பழைய குப்பை ஒன்றை கிளறியுள்ளார் முன்னாள் நடுவரான ஜான் ஹோல்டர். 1993ல் ஷார்ஜாவில் நடந்த இலங்கை, பாகிஸ்தான் இடையிலான ஒரு நாள் போட்டியின் போது தன்னை பயன்படுத்தி ஸ்பாட் பிக்ஸிங் செய்ய முயற்சி நடந்ததாக அவர் கூறியுள்ளார்.
பிபிசிக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார் ஹோல்டர். இவர் 11 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை பேட்ஸ்மேன்களை 85 ரன் எடுக்கும் வரைக்கும் யாரையும் அவுட்டாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.அப்படிச் செய்தால், 10,000 பவுண்டு பணத்தை ரொக்கமாக தருவதாக என்னிடம் சில புக்கிகள் தெரிவித்தனர். ஆனால் நான் அதற்கு, நீங்கள் தவரான நபரிடம் வந்து விட்டீர்கள் என்று கூறி அனுப்பி விட்டேன்.
1993ல் நடந்த போட்டியின்போது இது நடந்தது. அந்தத் தொடரில் இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்து கொண்டன. ஸ்பாட் பிக்ஸிங், மேட்ச் பிக்ஸிங் போன்றவற்றில் பல வீரர்கள், நடுவர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் இது மிகவும் தவறானது, அவமானகரமானது. ஒருமுறை நீங்கள் பிக்ஸிங்கில் ஈடுபட்டு விட்டீர்கள் என்றால் உங்களது சுய கெளரவம் செத்துப் போய்விடும், மானம் போய் விடும். அவமானத்திற்குள்ளாவீர்கள். உங்களது வாழ்க்கையே போய் விடும். இதை அனைவரும் உணர வேண்டும் என்றார் ஹோல்டர்.
1988 முதல் 2001 வரை ஹோல்டர் நடுவராக இருந்தார். மேலும் இங்கிலாந்து கவுண்டி அணியான ஹாம்ப்ஷயருக்காக அவர் வேகப் பந்து வீச்சாளராகவும் முன்பு விளையாடியுள்ளார்.